Friday 20 December 2013

அரசே கேள் - 03

படிச்ச தலைகள்
தெரு வழியே அலைவதேன்?
பெருந் தலைகள் சிலர்
சிலருக்கு வேலை வழங்குவதாலே!
குற்றவாளி தெரு வழியே அலைய
சுற்றவாளி சிறையில் வாடுவதேன்?
கையூட்டு வேண்டி
காவற்றுறையும் சட்டவாளர்களும்
உழைத்துப் பிழைப்பதனாலே!
எல்லோரும் குடும்பப் படமென
பொழுது போக்குக்காக
திரைப்படம் பார்க்கப் போனால்
படமாளிகைக்காரர்கள்
நீலப்படம் போட்டுக் காட்ட
தகாத உறவில் ஈடுபட்டதாக
இளசுகள்
காவற்றுறையில் பிடிபடுவதேன்?
படமாளிகைகளை
அரசு கண்காணிக்கத் தவறுவதாலே!
ஒரு கோடியில் விலைப் பெண்கள் அறை
மறு கோடியில் புகைத்தல், குடித்தல் அறை
எதிர் முன்னே கூத்தாடும் அறை
வெளியேறும் வழியில் தள்ளாடும்
நம்மாளுகளைப் பார்க்கக்கூடியதாக
குட்டித் தேனீர்க்கடை தொட்டு
5 நட்சத்திர விடுதிகள் வரை
அமைத்திருப்பதேன்?
வருவாயை நோக்காகக் கொண்டு
அரசு அனுமதி வழங்கியதாலே!
மதுக் கடைக்கும்
விலைப் பெண்கள் விடுதிக்கும்
சென்றவர்களுக்கு வாழ்வழிக்கவா
கன்னிப் பெண்கள் கருக் கலைக்கவா
போலி மருத்துவர்களும்
குட்டிக் குட்டி மருத்துவ நிலையங்களும்
தெரு வழியே மலிந்து கிடக்கிறது?
சாகத் துடிக்கும் மக்களைப் பாராமல்
வருவாயிலே குறியாயிருக்கும் அரசாலே!
ஓ! அரசே!
நாடு சீர்கெட்டு
நாட்டு மக்கள் சாக
உன் வருவாயைப் பார்த்து
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.