Wednesday 27 November 2013

அணுகுண்டுப் பேச்சாளர்

ஒருவர் : ஏனங்க அவரை அணுகுண்டுப் பேச்சாளர் என்கிறாங்க?

மற்றவர் : உனக்கு இதுகூடத் தெரியாதா?
"எல்லோருக்கும் வணக்கம்!
என்னை விட அடுத்தவர் சிறப்பாகப் பேசுவார்.
நன்றி கூறி விடை பெறுகின்றேன்." என்று பேசி முடிப்பதாலே...

அடிக்காமையால் படித்தேன்

சின்ன அகவையிலே
அம்மா தந்த அன்பால
தவறுகள் பல செய்திருப்பேன்...
பெரிய பொடியன் - எப்பனும்
சொல்லுக் கேக்கிறானில்லை என்று
அப்பாவிடம் முறையிடுவார்...
ஆனால்,
அடித்திருக்க மாட்டார்!
சொல்லியும் திருந்தாதோர்
நெருப்புக் கொள்ளியால
சுட்டும் திருந்தாதோர்
ஒரு நேரம்
பட்டுக் கெட்டுத் திருந்துவினம் என்று
சொன்னாலும் கூட
அடித்திருக்க மாட்டார்!
பட்டப்படிப்புப் படிகாட்டிலும்
உயர்தரம் வரை படித்தாச்சென
உழைப்பைத் தேடினால்
தகுதி காணாதென
வேலை கொள்வோர் தட்டிக்கழித்தனர்!
அம்மா அன்பாகச் சொல்லியும்
அப்பா அறிவாகச் சொல்லியும்
நான் மட்டும்
காதில போடாததால
வேலையும் கிடைக்காமையால
என் வயிற்றில் அடி விழுந்தது!
வயிற்றுப் பாட்டுக்கு
உழைக்க வேண்டுமெனக் கருதியே
அம்மா, அப்பா
எனக்கு அடிக்காமையே
என் வயிற்றில் அடி விழ
நானே
கணினி நுட்பம் படித்தே
உழைத்துப் பிழைக்கின்றேன்!



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): "வாழ்க்கைப் பாடத்தை அனுபவமே கற்றுத்தருகிறது" என்ற தங்கள் அனுபவக் கருத்து அருமை.

என் பதில்: நன்றிகள்!
நண்பர் சரவணமுத்து: அருமை!

என் பதில்: நன்றி.
நண்பர் மாலதி: நல்ல கருத்து.
என் பதில்: நன்றி
நண்பர் புலவர் சா.இராமாநுசம்:
தானாகக் கனிந்தால் தான் பழம் இனிக்கும்
தாங்களும் அப்படித் தான்
தேனான கருத்தையே நன்கே முடிவில்
தெரிவித்து உள்ளீர் இங்கே
என் பதில்:
"தானாகக் கனிந்தால் தான்
பழம் இனிக்கும்" என்பதை
ஏற்றுக் கொள்கின்றேன்!
பழம் தரும் மரத்துக்கு
நீர் ஊற்றுமாப் போல
நம்ம பிஞ்சுகளுக்கும்
பெற்றவர்கள் வழிகாட்ட வேண்டுமே!
பிஞ்சுகளும் அஞ்சாமல்
முயற்சி எடுக்க வேண்டுமே!

ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...

மாணவர் : தமிழ் நாடெங்கும் பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களே!

ஆசிரியர் : அப்படி என்றால், ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...


குறிப்பு:- 2011 வைகாசி மாதம் யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில்
"சென்னைப் பெண் பிள்ளை ஒருவர் 1200 இற்கு 1180 புள்ளிகள் பெற்றுள்ளார்." என்ற செய்தியைப் படித்த பின் "ஆண் பிள்ளை ஒருவரால் அப்படி ஏன் பெறமுடியாது?" என்று சிந்தித்த போது இப்பதிவை எழுத முடிந்தது.

ஊருக்கு மதியுரை உனக்கில்லையடி


ஓர் ஊரில சிறந்த சைவ சமயப் பேச்சாளர் இருந்தார். "அவருடைய
பேச்சை நேரில பார்த்துப் பேசும் போது கேட்க வேண்டும்" என்பது
அவரது மனைவிக்கு நெடுநாள் விருப்பம். அவளது வீட்டில் இருந்து
சற்றுத் தூரத்தில் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அங்கு தான்,
இன்று தனது கணவன் பேசப் போகிறாரென அறிந்த அவள், களவாகப் போய் தனது விருப்பத்தை நிறைவேற்ற முனைந்தாள்.

கொடி மரத்துக்கான வழிபாடு(பூசை) முடியத்தான், பிள்ளையார் கோவிலில சமயப் பேச்சுத் தொடங்கும். ஒலிபெருக்கியில் சொல்லப்படுவதை கேட்டுக் கொண்டே சோறு சமைத்து முடித்தாள். வழிபாடு முடியப் போவதை உணர்ந்து, கறிகளைப் பிறகு வந்து வைக்கலாமென முடிவு எடுத்துக் கோயிலுக்குப் புறப்பட்டாள். சிறிது நேரத்தில் பேச்சாளரின் சமயப் பேச்சுத் தொடங்கியது.

"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை" யில தொடங்கி "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என முடித்து
கோவிலுக்கு வருவோர் நோன்பு(விரதம்) இருந்து பிள்ளையாரை
வழிபட்டால் எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென்றார். முடியாதோர்
சைவ உணவை மட்டும் உண்ணுங்கள். முட்டை, மீன், இறைச்சி
உண்பவர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டாம். பச்சை இலை,
காய் கறி சமைத்து உண்பதோடு, இறைவழிபாட்டையும் மேற்கொண்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்றார். சைவமாக இருந்து
கொண்டு பிள்ளையாரை வழிபாட்டால் நன்மைகள் உண்டெனப்
பேச்சைத் தொடர்ந்தார்.

பேச்சாளரின் மனைவி போதுமென வீடு திரும்பி மைசூர் பருப்பு,
உருளைக் கிழங்கு, கத்தரி, வெண்டி என நாலு கறிகளும் வாழைக்காய், பப்படம் பொரியலும் வைத்து முடியப் பேச்சாளரும்
வீடு வந்து சேர்ந்தார். சரி, சரி சாப்பாட்டைப் போடுமெனக் கணவன்
குந்தவும் பெரிய தலை வாழையிலையைப் போட்டு சோறு,
கறிகளை வைத்து முடித்தாள். பருப்புக்கு மேலே இதயம் நல்லெண்ணை விடும் போது தான் "ஏனடி கோழிக் கறி வைக்கேல்லை" என்றார் பேச்சாளர்.

உங்கட பேச்சைப் பார்க்கணும் கேட்கணும் என்று இன்றைக்குப்
பிள்ளையார் கோவிலில வந்து ஒளிந்திருந்து பார்த்துக் கேட்டேன்.
அங்கே தானே "நோன்பிருங்கள், இல்லாட்டிச் சைவமாயிருங்கள்
அப்ப தான் பிள்ளையார் அருள் தருவார்" என்று சொன்னியள்.
அதனால வந்த உடனேயே "பிடித்து வைத்திருந்த கோழியைத்
திறந்து விட்டிட்டு" பதினாறு நாள் பிள்ளையார் கோவில் திருவிழா
முடியக் காய்ச்சலாமென, சைவக் கறி, சோறு வைத்தேன். இதில்
"என்ன பிழையிருக்கு?" என்றாள் பேச்சாளரின் மனைவி.

"ஊருக்கு மதியுரை(உபதேசம், ஆலோசனை) உனக்கில்லையடி! வீட்டில சொன்னதைச் செய்ய வேண்டியது தானேடி" என்று முழங்கினார் பேச்சாளர். "உங்களைப் போல பேச்சாளர்கள் இப்படி நடந்தால், உங்கட பேச்சைக் கேட்டவர்கள் என்ன செய்வார்கள்" என்றும் "உன்னைத் திருத்திக் கொள், மக்களாயம்(சமூகம்) தானாகவே திருந்தும்" என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதையும் கூறி "வாய்ப் பேச்சை நிறுத்திப் போட்டுச் சாப்பிடடா, இல்லாட்டி வேற பெண்டாட்டியைப் பாரடா" என்று பேச்சாளரின் மனைவியும் உறைப்பாகத் திட்டித் தீர்க்கவும் அங்கு அமைதி நிலவியது.
(எல்லாம் புனைவு - யாவும் கற்பனை)

எங்கேயங்கோ ஓடுறியள்...?

ஒருவர் : துள்ளித் துள்ளி எங்கேயங்கோ ஓடுறியள்?

மற்றவர் : கால் கோதிக்க, தலை வெடிக்க வெயிலுக்கு அஞ்சி நிழலை நாடி போகேக்க எவனோ ஒருவன் பின்னால கத்துறான்டா...

மரம் : மரங்களைத் தறிக்காமல் இருந்திருந்தால், இப்படியொரு நிலைமை உங்களுக்கு வருமே?



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இப்பதிவு இடம்பெற்ற போது:

"மரம் வெட்டிகளுக்கு இது
ஒரு மரண வெட்டு!" என்று புலவர் இராமாநுசம் அவர்கள் கருத்துக் கூறினார்.

"வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
போட்டு உடைத்து விட்டியளே..." என்று நான் பதில் கூறினேன்.

"வீதியை (ரோடை) அகலப்படுத்தும் போது இரு பக்கத்திலும் இருக்கும் நன்கு வளர்ந்த மரங்களை தகுந்த உபகரண‌ங்களுடன் பெயர்த்து எடுத்து வேறிடத்தில் நட்டுப் பத்து வருடங்கள் வரை பாதுகாக்க முடியும் என்று கேள்விபட்டிருக்கிறேன். நம் நாட்டில் ஏன் அது போலச் செய்வதில்லை?" என்று நண்பர் ஸுகிரி அவர்கள் கருத்துக் கூறினார்.

"நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மையானது. ஆயினும், இவற்றுடன் தொடர்புடையவர்கள் இதில் அக்கறை காட்ட வேண்டும்." என்று நான் பதில் கூறினேன்.

நகைச்சுவையான வழக்குகள்

இலங்கையில் ஜி.ஜி.பொன்னம்பலம் எனும் சட்டவாளர் பலராலும்
அறியப்பட்ட ஒருவராவார். இவரின் திறமையை அறிந்து பிரிட்டிஸ்
மகாராணி கூட தனது வழக்குக் பேச அழைத்திருந்தாராம் என்றால்
இவரது புலமையை எப்படி நான் மதிப்பிடுவேன். இவர்
வழக்காடுவதில் புலி வீரன். இவர் எடுத்தாளும் எந்த வழக்கும்
தோற்றதில்லையாம்.
இலங்கை அரசு ஒருமுறை தீப்பெட்டிகளின் விலையை "ஒரு
யானைத் தீப்பெட்டி ஐம்பது சதம்" என உயர்த்தியிருந்தது. ஒரு நாள்
ஒரு வணிகர் ஒரு தீப்பெட்டியை ஒரு உரூபாவுக்கு விற்றதைக்
கண்ட காவற்றுறை, அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்
தாக்கல் செய்திருந்து. உடனடியாகக் குறித்த வணிகர்
ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களை அணுகி, தனது சிக்கலை
விளக்கினார்.
வழக்கை ஆய்வு செய்யும் நாளன்று, ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள்
"ஒரு யானைத் தீப்பெட்டி ஐம்பது சதம்" என்பது அரச சட்டம், அரச
சட்டத்தை மீறி ஒரு தீப்பெட்டியை ஒரு உரூபாவுக்கு விற்றதாகக்
காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததில் தவறு
இருப்பதாகச் சுட்டிக்காட்டித் தனது கருத்தை வெளியிட்டார். நீதிபதி
அவர்களே! குற்றம் சுமத்தப்பட்ட வணிகர் விற்ற தீப்பெட்டியில்
இரண்டு யானைகள் இருப்பதால், "ஒரு யானைத் தீப்பெட்டி ஐம்பது
சதம்" படி இரண்டு யானைகள் உள்ள ஒரு தீப்பெட்டியை ஒரு
உரூபாவுக்கு விற்றதில் தவறில்லை என வழக்காட, நீதிபதியும்
வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
ஒரு பெண்ணின் கற்பை அழித்ததாக ஒருவரைக் காவற்றுறை
பிடித்துச் சிறையிலடைத்த பின்னர், அவருக்கு எதிராக நீதிமன்றில்
வழக்குத் தாக்கல் செய்திருந்து. சிறைப்பட்டவரின் உறவினர்
உடனடியாக ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களை அணுகி, தனது
சிக்கலை விளக்கினார். அவரும் "நீதிமன்றிற்கு வாரும் ஆளை
வெளியில எடுத்து விடுகிறேன்" என்று சொல்லி உறவினரை
அனுப்பி வைத்தார்.
வழக்கு நாளும் வந்தது. வழக்கு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. நீதிபதியும் குற்றவாளி தொடர்பான சட்டவாளரை விளக்கமளிக்குமாறு அழைத்தார். ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் எழுந்து, நீதிபதி அவர்களே! வழக்குத் தொடர்பான முதலாமாளிடம் கேள்விகளைக் கேட்க அனுமதி தருமாறு கேட்டார். நீதிபதியும் அனுமதி வழங்கினார்.
"உமது கற்பை அழிக்கக் குற்றவாளி முயன்ற போது; நீர் தடுத்தீரா?
எதிர்த்தீரா? உமது கற்பைக் காக்கப் போராடினீரா? அப்படியானால்,
போராடியதிற்குச் சான்றாகப் புண்கள் அல்லது அடையாளங்கள்
ஏதுமுண்டா?" என்று ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் கேட்ட போது
முதலாமாள் நிறைவான பதில் தராமையால் "ஊசியை ஆட்டிக்
கொண்டு நூலைக் கோர்க்க முடியாதது" போல முதலாமாளும்
குற்றவாளியும் விரும்பியோ இணங்கியோ கூடியிருக்க வேண்டும்.
ஆகையால், என் பக்கத்தாள் குற்றவாளியல்ல எனச்
சான்றுப்படுத்த(நிரூபிக்க) நீதிபதியும் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இதில் என்ன நகைச்சுவை என்றால், நான் பிறக்க முன்னரே
இவ்விரு வழக்குகளும் நடந்தனவாம். சிறந்த வழக்குக் கருத்து
மோதல்களுக்கு எடுத்துக் காட்டாக பெரியவர்கள் சிலர் சொன்னதை,
நான் காதில போட்ட அளவுக்குத் தொகுத்துத் தந்துள்ளேன்.

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): நகைச்சுவையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டிய இந்த வழக்காளர் குற்றத்திற்கு ஆதரவாக வாதாடியிருக்கிறாரே!

என் பதில்: உங்கள் கருத்து மிகவும் சரி. குறித்த வழக்காளர்/சட்டவாளர் தனது திறமையால் பல குற்றவாளிகளைக் காப்பாற்றியது தவறு தான். இவரது வழக்காடும் திறனை நினைவூட்டலாம்.

சட்டம் படிக்கின்றவர்கள் இவரைப் போன்றவர்களின் வழக்காடும் திறனைப் பொறுக்கித் தமது புலமையைப் பெருக்கலாமென நினைக்கின்றேன்.

நகைச்சுவைக் கதை

உச்சந்தலை வெடிக்க
தலைக்கு மேலே கதிரவன் இருக்க
சிறுகுடல் பெருங்குடலை
பிடுங்கித் தின்னுமளவுக்கு
நம்மாளுகளுக்கு பசி!
செல்லும் வழியெல்லாம்
சாப்பாட்டுக்கடையைத் தேடியவர்களுக்கு
ஆங்கோர் கடை அகப்பட
நுழைந்து சாப்பிட அமர்ந்தாச்சு!
கட்டணத்தைக் கட்டிப்போட்டு
விரும்பிய சாப்பாட்டை
வேண்டிச் சாப்பிடலாமென
பணியாளர் சொல்லவும்
ஆளுக்காள் பணமில்லையென
கையை விரித்து
தலையைச் சொறிந்துகொண்டு
கடையை விட்டு
வெளியேறத்தான் முடிந்தது!
சாப்பிட்டு முடியப் பணம் கட்டுற
சாப்பாட்டுக்கடையைத் தேடி
கண்டுபிடித்துச் சாப்பிட்டுமாச்சு!
ஆளுக்காள்
பணம் செலுத்துவதற்குப் போட்ட
நாடகம் எப்படி இருந்திருக்கும்?
அந்த ஐயா
என்ர கணக்கைச் செலுத்துவாரென
பெரியவர் ஒருவரைக் காட்டிப்போட்டு
முன்பக்கமாக ஒருவர்
விவேக்கைப் போல தப்பினார்!
ஒண்டுக்கு
ஒருக்கால் போட்டு வாறனென
பின்பக்கமாக ஒருவர்
வடிவேலுவைப் போல தப்பினார்!
சந்தானம் போல ஒருவர்
"அண்ணே!
கண்ணிலே என்ன மீசை!" என
நுழைவு வழியால
வந்தவரிடம் கேட்டுத் தப்பியோட...
"என்ர பணத்தை
பிடுங்கிக் கொண்டு போறனுங்க" என
செந்திலைப் போல ஒருவர்
ஒப்பாரி வைத்துத் தப்பிக்க
முயன்ற வேளை
காவலாளி ஊதுகுழலை ஊத
படையினர் சுற்றிவளைத்து
எல்லோரையும் பிடித்த போதுதான்
படையினரின் கடையென்று அறிந்து
நம்மாளுகளும் முளிக்கின்றனர்!

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): நண்பர்கள் இருந்தால் கவலையில்லை. எத்தனை வேணும்னாலும் சாப்பிடலாம்

என் பதில்: உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால், கை நிரம்பப் பணம் இருக்க வேண்டுமே!

நண்பர் ஸுகிரி: அப்புறம் அவர்களுக்கு என்ன மாதிரி தண்டனை கிடைத்தது? அரிசில கல்லை பொறுக்கினாங்களா, இல்லை ரவைல வண்ட எடுத்தாங்களா?

என் பதில்: அடுத்து அவர்களுக்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. அதனைப் பார்க்க நான் அங்கு இல்லையே!

நண்பர் சரவணமுத்து: என்ன தண்டனை கிடைத்தால் என்ன? சாப்பாடு தான் சாப்பிட்டு முடிச்சாச்சுலப்பா!!!!!!!

என் பதில்: பணமிருந்தால் கடைப் பக்கம் போகலாமென இக்கதை சொல்லுகிறது.

நண்பர் விஷ்வம்: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

என் பதில்:
உண்மை! ஆனால், பணமில்லாமல் சாப்பாட்டுக் கடைக்குள் நுழைந்தால்.....

சேமிப்பில் ஏதுமில்லை என்றால்...


சிறுகச் சிறுக
உழைத்ததெல்லாம்
பணமாக வைப்பிலிடாமல்
நிலமாக வேண்டி விட்டதால்...
வைப்பகங்கள்(வங்கிகள்)
சோர்வுற்று மூடப்பட்டாலும்
திருடர்களால் திருட்டுப் போகாமலும்
எனது பணம் நிலமாக மின்னுகிறது!
வட்டி வரும் குட்டி போடுமென
வைப்பகங்களில்
பணத்தைப் போட்டவர்கள்
கரைத்துப் போட்டு
வெறும் கையோடு வாடுகின்றனர்!
சேமிப்பு என்பது
கரையும் முதலீடாக இருக்கவே கூடாது...
பணம் குட்டி போட்டாலும்
நிலம் குட்டி போடாது...
சேமிப்பின் அளவைப் பொறுத்தே
முதுமை நெருங்கிய வேளை
தோள் கொடுக்க வருவோரை
எண்ணிப் பார்க்கலாம்!
சேமிப்பில் ஏதுமில்லை என்றால்
உயிர் பிரிந்த உடலைக் கூட
சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல
எண்ணிப் பாரும் எவர் வருவார்?

சுழியோடினால் தான் கிடைக்கும்

வாழ்க்கை என்பது
வழுக்கி விழுத்தும் சேற்றில்
நடப்பது போலத் தான்...
வாழ்க்கை என்பது
கரடு முரடான வழியில்
புரண்டு உருண்டு
பயணிப்பது போலத் தான்...
வாழ்க்கை என்பது
உறவும் வரும் பிரிவும் வரும்
நிலையாக எவரும் வராத
உறவுகளோடு தான்...
வாழ்க்கை என்பது
கற்று முடிந்ததும் வாழ்வதல்ல
வாழ்ந்து கொண்டே
கற்றுக் கொள்வது தான்...
வாழ்க்கை என்பது
முடிவே இல்லாத
கரையைத் தொட முடியாத
துன்பக் கடல் தான் - அதில்
சுழியோடித்தான்
மகிழ்ச்சி எனும் தேனை
அள்ளிப் பருக முடியும்!

சாப்பாடு போடுறாங்கோ

ஒருவர் : அவங்கட வீட்டில நாய்களைப் போல ஆட்களும் அடிபடுறாங்களே...

மற்றவர் : அந்த வீட்டு ஆச்சி, தனது 170 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதாலே சாப்பாடு(அன்ன தானம்) போடுறாங்கோ... எங்கையும் நம்மாளுகள் உப்பிடித் தானுங்கோ...

Friday 15 November 2013

ஒரு வரிச் செய்தி

என்ன தான் இருந்தாலும் மலிந்தால் அங்காடிக்கு (சந்தைக்கு) வருமே!

அன்புக்காக...

பணம் இருக்கும் வரை தொடருவோரை, கையில பணமில்லை என்றதும் காணக்கிடையாதே! என்னன்பை நம்பிய உறவுகளே இன்னும் தொடர்பில் உள்ளனர்.

நல்ல திரைப்படம்



இலக்கியமொன்றில்
விலக்கிவைக்க முடியாதது
திரைப்படமே!
வாழும் நாம்
வாழ்நாளில் பார்க்கும்
கதையாகட்டும்...
வாழ்ந்தவர் பலர்
வாழ்வதாகக் காட்டும்
கதையாகட்டும்...
மூன்று மணி நேரம்
ஒன்றிப் பார்க்கக் கூடியதே
நல்ல திரைப்படம்!
காட்சிகளால் (Scene) அழகூட்டுவதோ
நகைச்சுவையால் (Jokes) கதை நகர்த்துவதோ
பாடல், ஆடல்களால் நேரம் கடத்துவதோ
நல்ல திரைப்படமல்ல...
பல்சுவை கொண்ட கதையாக
இயல்பான வாழ்வை
நேரில் பார்த்த நிறைவாக
அழுகை, சிரிப்பு, எழுச்சி என
உள்ளத்தில் மாற்றம் தரவல்ல
பொழுதுபோக்குக் கலையே
நல்ல திரைப்படம்!

பழகுவதும் பிரிவதும்

பழகு முன் பல ஐயங்கள்...
பழகிய பின் பல விருப்பங்கள்...
இறுக்கமான நெஞ்சையும்
நறுக்காக இழகவைத்தே
நெருங்கிப் பழகிய பின்
நெருக்கமின்றி விலகுதல் பிரிவா?
ஓ! உறவே!
ஒரு முறை எண்ணிப்பார்...
பழகுவதை விடப் பிரிவது சுகமா?
என் நிலையில்
பழகுவதும் பிரிவதும் முறையல்ல...
ஓ! உறவே!
பிரிவது சுகம் என்றால்
என்னோடு பழகாதே!
ஏனென்றால் - நான்
பிரிவைச் சுமக்க விரும்பவில்லை!

பீரங்கிப் பேச்சாளர்

ஒருவர் : ஏனங்க அவரைப் பீரங்கிப் பேச்சாளர் என்கிறாங்க?

மற்றவர் : உனக்கு இதுகூடத் தெரியாதா?
                    ஆள் (அலறினால்) மேடையில் பேசத் தொடங்கினால் அரங்கிற்கு வந்தவர்கள் ஓட்டம் பிடிப்பினம்...
அது தான்...

பழம் தின்று கொட்டை போட்டவர்கள்

"நாம் கற்றது
கைப்பிடி மண்ணளவு
கற்க வேண்டியது
உலகளவு" ஆக இருக்கையில்
நாளுக்கு நாள்
நாம் எத்தனையோ
கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறதே!
"பட்டால் தானே தெரிகிறது
சுட்டது நெருப்பென்று" என்ற
பாடல் வரிகளை நினைவுபடுத்தி
எதற்கும் முகம் கொடுத்துப் பழக
நாமே தான்
முயற்சி எடுக்கணுமே!
பழம் தின்று
கொட்டை போட்டவர்களைப் பார்த்தாவது
நேற்றைக்கு முந்திய நாள்
பெய்த மழையைக் கண்டு
நேற்று முளைத்த காளான்கள்
இன்று தங்களைச் சரிபார்க்கலாமே!
படித்தறிவு என்பது படவரைபு போல
பட்டறிவு என்பது
ஒருமுறை உண்மையை
நேரில் கண்ட தெளிவு!
படித்தவர்களை அணைப்பது போல
பட்டறிவாளர்களையும்
அணைத்துச் சென்றால் தானே
வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்!

குறிப்பு:- நேற்று முளைத்த காளான்கள் - பிஞ்சுகள் (படித்தறிவு, பட்டறிவில் சிறியோர்); பழம் தின்று கொட்டை போட்டவர்கள் - பழங்கள் (படித்தறிவு, பட்டறிவில் பெரியோர்) எனப் பொருட்படுத்துக.

வருவாய் (சீதனம்) கொடுத்தால் தானா காதல் வரும்...

ஓராள் நடிப்பது தனியாள் நாடகம். அப்ப, இரண்டாள் நடிப்பது ஈராள் நாடகமோ? என்னவோ, இரண்டாள் சேர்ந்து இப்படி நடிக்கிறாங்க...

கந்தன் : இஞ்சாருங்கோ... நீங்கள் திருமணம் (கலியாணம்) செய்யவில்லையா?

கணபதி : இல்லை. காதலித்த பத்தில ஒன்றேனும் வருவாய் (சீதனம்) தரவில்லை... அதனால முடியல...

கந்தன் : திருமணம் (கலியாணம்) செய்யாமல் எப்படித்தான் காலம் தள்ளப் போகிறியோ தெரியவில்லையே!

கணபதி : துயரப்படாதீங்க... இன்னும் இருபதைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேனே...

கந்தன் : அதில, ஒன்றாவது வருவாய் (சீதனம்) தருமென நம்புகிறாயா?

கணபதி : எவராச்சும் வருவாய் (சீதனம்) தரமுடியாவிடின் திருமணம் (கலியாணம்) செய்யமாட்டேனே!

ஈராள் நாடகம் எப்படி? இந்தக் காலத்துப் பொடியள் இப்படித்தான். பொடிச்சிகளே! கொஞ்சம் ஏமாறாமல் தப்பிக்கலாமே!

Monday 11 November 2013

வீட்டுக்கு வீடு வாசற்படி

நம்ம வீட்டுக் கதைகளை மூடிக்கொண்டு
நாங்க அடுத்தவர் வீட்டுக் கதைகளைப் பேசுறம்
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."

மாற்றான் வீட்டுப் பிள்ளையில பிழை என்கிறம்
எங்க வீட்டுப் பிள்ளை என்ன தங்கமா?
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."

நம்ம வீட்டு வரவைப் பார்க்கிறம்
அடுத்தவர் வீட்டுச் செலவை மதிக்கிறோமா?
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."


தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:

"வீட்டுக்கு வீடு வாசற்படி தான் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கேட்டது
நம்ம பையன் குறும்பு பண்ணா அவன் சுட்டிப்பையன்
அடுத்த வீட்டு பையன் குறும்பு பண்ணா அவன் தறுதல
நம்ம பெண் அதிகம் பேசினால் அவள் கலகலப்பானவள்
அடுத்த வீட்டு பெண் அதிகம் பேசினால் அவள் வாயாடி
நாம் தப்பு பண்ணா மறைக்கப்பார்ப்போம்
அடுத்தவர் தப்பு பண்ணா குத்திக்காட்டுவோம்" என்று நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்கள் சுட்டிக்காட்டினார்.

"நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வு வந்தால் வீட்டுக்கு வீடு இப்படி நிகழாது!" என்று நானும் பதிலளித்தேன்.

பணமீட்ட

ஒருவர் : பணமீட்ட என்ன வழி பண்ணலாம்?

மற்றவர் : மாற்றார் பணத்தைக் களவாடலாமே!

மூன்றாமாள் : பிடிபட்டால் என்ன செய்வாய்?

நான்காமாள் : 'களவும் கற்று மற' ந்தாச்சு என்போம்!



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இப்பதிவு இடம்பெற்ற போது:

"மூன்றாமாள் ?
நான்காமாள் ?
இப்போதெல்லாம் இத்தொழிலிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. என்பதை பத்திரிகையில் பல பெண்கள் களவு, மோசடியில் பிடிபடுவதை வைத்துத் தெரிந்துகொள்ள முடிகிறது." என்று நண்பர்
வினோத் (கன்னியாகுமரி) தெரிவித்திருந்தார்.

"ஆண், பெண் சமவலு இத்தொழிலிலும் தான்... பல நாட் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவானே!" என்று நானும் பதிலளித்தேன்

வெற்றி பற்றி

முடியாததற்கு முழுக்குப் போடு
முடிந்ததற்கு முயற்சி எடு
"வெற்றியுனை நாடும்"

போட்டியில் உன்னை முந்துவோரும்
போட்டியில் உன்னைத் துரத்துவோரும்
"உனது வெற்றியின் பின்னூட்டிகள்"

கள நிலையும் முயற்ச்சி எடுத்தலும்
ஒன்றையொன்று சார்ந்து இருக்கும்
"இரண்டும் வெற்றியின் தளம்"

வேலையில்லாமல் பிச்சை எடுக்கையில்...

ஒருவர் : என்னங்க... அந்தக் குண்டுமாமாவிட்ட ஒருவருமே பிச்சை கேட்க மாட்டேங்கிறாங்க...

மற்றவர் : நாள் முழுக்க வீட்டில வேலையைச் செய்ய வைச்சிட்டு, அதற்கீடாக நாட்கூலியை வழங்குவதாலே...

மூன்றாமவர் : குண்டுமாமா போல எல்லோரும் இருந்து விட்டால் பிச்சைக்காரரை ஒழித்துவிடலாம் போலிருக்கே...

நெருக்கடியும் நண்பர்களும்

வணக்கம் நண்பர்களே!

எனக்கும் 
கொஞ்ச நண்பர்கள் இருந்தாங்க...
கொஞ்ச நாளாய் 
என்னிடம் காசில்லை என்றதும்
என் நிழல் போல நின்றவர்கள்
எனக்குக் கிட்ட நில்லாமலே
எப்படியோ ஓடி மறைந்திட்டாங்களே!

நண்பர்களே!
நண்பன் பற்றி - உங்கள்
உள்ளம் திறந்து சொல்லுங்களேன்!
கள்ளம் இல்லா நண்பன் என்றால்
நெருக்கடி நிலை (ஆபத்து) வந்தால்
கைகுலுக்க நெருங்குவானே!
நெருக்கடி நிலையைக் (ஆபத்தைக்) கண்டால்
நம்மைக் காணாதவர் போல
ஓட்டம் பிடிப்பவர் எல்லோரும்
நண்பரென நான் கண்டறியேன்!


Thursday 7 November 2013

கத்திக்கு வேலை

வேலைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது, பயணித்த ஊர்தி எப்பனும் நகரவேயில்லை. "வேலைக்கு நேரம் போகப் போகுதே" என்று ஆளுக்காள் ஒரே கூப்பாடு. ஓட்டுநரையும் நடத்துநரையும் பார்த்து "ஊர்தி ஏன் நகரவேயில்லை" என்று கேட்ட போது "கொஞ்சம் இறங்கிப் பாருங்களேன்" என்றனர். சொன்ன உடனேயே சிலர் "என்ன நடக்கிறது" என்று பார்க்கத் துள்ளிக் குதித்து இறங்கினர்.
தெருவின் இருமருங்கிலும் விடுப்புப் பார்ப்போர் ஏராளம். சீனவெடி கொழுத்திக் கொண்டு சிலர் முதல் நிரையில் நகர்ந்தனர். இடையிடையே சிலர் "தலைக்கு மேலே வெடிக்கும்" வாணவெடிகளையும் கொழுத்திச் சென்றனர். "நேருக்கு நேராய் வரட்டும், நெஞ்சுத் துணிவிருந்தால்" என்ற பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க "டங்கு டக்கு" எனத் தவிலடிக்க இரண்டாவதாக நகருவது கண்ணன் மேளதாளக் குழுவினர் என்றனர். "தா தெய், தாம் தகிட தோம்" என்ற தாளக்கட்டுக்கு அமைவாய் கண்ணகி நாட்டியப் பெண்கள் குழு நிலமதிர ஆட்டம் போட்டவாறு மூன்றாவதாய் நகர்ந்தனர்.
கடைசியாகக் கதாநாயகர்களுக்கு உயர்ந்த நிலையில் மதிப்பளிக்கப்பட்டு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர். அதுவும் உழவு இயந்திரப் பெட்டியில் கட்டிலைப் போட்டு அதற்கு மேலே அவர்களை நிற்க வைத்திருந்தனர். அவர்களது கழுத்துக்கு ஐம்பது பவுண் தங்கப் பதக்கம் சங்கிலி தேடாக் கயிறு மொத்தத்தில போட்டு இருந்தனர். போதாக்குறைக்கு நீண்ட மலர் மாலையும் அணிவித்து இருந்தனர். ஊர்ப் பெரியவர் வந்து போக்குவரவுக்கு இடையூறு விளைவிக்காமல் ஊர்வலத்தை ஓர் ஓரமாக ஒதுக்கினார்.
ஓட்டுநரும் நடத்துநரும் "ஆட்டுக் கடா ஊர்வலம் பார்த்தது போதும் ஊர்தியில் வந்தேறுங்கோ" என அழைத்தனர். ஊர்தி நகர, நகர ஆட்டைப் பார்த்த நம்மாளுகள் ஓடி, ஓடி வந்து தொற்றி ஏறினர். ஊர்திக்குள்ள நம்மாளுகள் ஏறினால் மிச்சம் சொல்லவும் வேண்டுமா?
"தளபதி போலத் தாடி வைத்த, செவி மடிந்து தொங்க, மான் கொம்பு போல நீண்ட கொம்பு வைத்த, எவ்வளவு பெரிய, உயரமான ஆட்டுக் கடாவை இவ்வளவு மதிப்பளித்துக் கொண்டு செல்கிறாங்களே" என்று ஆளுக்காள் தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தீர்க்கத் தொடங்கினர்.
ஊர்க் கோடியிலுள்ள ஒரு கோவிலில, ஆண்டுக் கணக்கில இப்படி வளர்த்த ஆட்டுக் கடாக்களை, இவ்வாறு ஊர்வலமாகக் கொண்டு போய்ச் சேர்த்து, கோவில் வாசலில வைத்து ஆட்டைக் கிடத்திப் போட்டு, கத்திக்கு வேலை கொடுப்பாங்கள். இதற்காக மாதக் கணக்கில கத்தியைத் தீட்டீ வைத்திருப்பாங்கள். அதாவது ஒரே வெட்டில, தலை வேறு முண்டம் வேறாக வெட்டியதும் பாயும் குருதியை(இரத்தத்தை) கடவுளின்(சிலையின் முகத்துக்கு) பக்கமாகத் தெறிக்கக் கூடியதாக வடிவமைத்துச் செய்வாங்கள்.
தங்கள் உறவுகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக, குறித்த கடவுளுக்கு குருதிச் சாவு(இரத்தப் பலி) கொடுக்க வேண்டுமென்பது சிலரது நம்பிக்கை. இதன்படிக்கு, இவ்வாறு ஆடு, கோழி வெட்டும் நிகழ்வை 'வேள்வி' என்று அழைப்பாங்கள். வேள்விக்குக் கழுத்தைக் கொடுக்க இருக்கின்ற ஆட்டுக் கடாவுக்கும் சேவற் கோழிக்கும் இவ்வளவு மதிப்பா? என்றெல்லாம் அறியாத, தெரியாத பலர் ஐயங்களைக் கேட்டுக் கொண்டிருக்க, ஊர்தியும் நிறுத்தப்பட, நானும் இறங்கி விட்டேன்.
ஊர்தியில் பக்கத்து இருக்கையில் இருந்த அகவை(வயது) எண்பது மதிக்கூடிய ஒருவர் "கோவிலில வெட்டினால் ஆட்டுக் குருதி(இரத்தம்) வறுத்துத் தின்னேலாது. ஆனால், வீட்டுப் பக்கமாக வெட்டினால் ஆட்டுக் குருதி(இரத்தம்) வறுத்துத் தின்னலாம்" என்று துயரப்பட்டது நினைவுக்கு வந்தது. இப்பேற்பட்டவர்களுக்கு அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தான் சரி.
அறிவியலில் முன்னேற்றமடைந்த இருபத்தியோராம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர் தங்கள் புத்தியைத் தீட்டி வேள்விகளை நிறுத்தாவிடில் கடவுளுக்குக் குருதிப் படையலென ஆடு, கோழி வெட்டுறது தொடருமென எண்ணியவாறு எனது செயலகத்திற்கு நுழைந்து என் பணியைத் தொடரப் பிந்திப் போச்சு.
(எல்லாம் புனைவு/ யாவும் கற்பனை)