Tuesday 21 May 2013

நான் வாழ நாலும் வேண்டும்


கை கடித்தால்
கைகுலுக்க எவர் வருவார்...
வயிறு கடித்தால்
வாலாட்ட நாயும் வருமா?
கெட்டு நொந்தால்
வழிகாட்ட எவர் வருவார்...
பட்டுத் தெளிந்தால்
உன்னைவிட எவர் வேண்டும்?
"உன்னை நீ அறி"
அன்பு, அறிவு, ஆளுமை, வருவாய் என
என்றும் - இவை
நான்கும் இருந்துவிட்டால்
நலமாய் - உன்
வாழ்வு நகருமே!

கற்புப் பற்றி....


வன்மைகள்
காவலாக இருப்பதால் தான்
காக்கப்படுகிறது கற்பு!

மென்மைகள்
காவலாக இருப்பதால் தான்
பறிக்கப்படுகிறது கற்பு!

கற்பென்பது ஒழுக்கமே!

என்னடி பண்ணுற?


மாமியார் : என்னடி பண்ணுற?

மருமகள் : நானும் மாமியார் ஆனால் என்ன பண்ணலாம் என எண்ணுகிறேன்

நினைவில் வருவது


ஆசிரியர் : பாடங்கள் நினைவில் வருகிறதா?

மாணவன் : படிப்பு நினைவில் வராதாம்...

ஆசிரியர் : அப்ப என்னடா வரும்?

மாணவன் : பறவை முனியம்மா அடிக்கடி கனவில் வருகிறா...

Thursday 16 May 2013

ஒரு வரிப் பொய்


இன்று முழுக்கச் சாப்பிட மறந்து போயிட்டேனே!

ஒரு வரி உண்மை


என் மனைவி தாய்மை அடைஞ்சிட்டாளே!

ஒன்றை விட்டிட்டார்கள்!


அகவை எத்தனை? வருவாய் எவ்வளவு? என்று கேட்ட பிறகு...

தரகர் :  பல இலட்சம் காசு, வீடு வளவு, காணி எல்லாவற்றுடனும் ஒரு பெண் இருக்கு, அவளைக் கட்டு எனக் கேட்டார்!

அழகிய பெண் :  என்னைக் காதலிக்கிறீங்களா? எனக் கேட்டாள்!

நான் :  இருவரும் ஒன்றை விட்டிட்டார்கள்!

உண்மை :  நான் திருமணம் ஆகியவர்.

ஒண்டும் ஒட்டுதில்லையே!


நோயாளி : கொஞ்ச நாளாக ஒண்டும் ஒட்டுதில்லையே ஐயா?

மருத்துவர் : வழமையாக என்ன சாப்பிடுவியள்?

நோயாளி : உண்டதெல்லாம் வாயாலையும் வயிற்றாலையும் போகுதையா?

மருத்துவர் : வயிற்றாலை போகாதே?

நோயாளி : ஐயா, மலம் செல்லும் வழியால போகுதையா!

மருத்துவர் : விரும்பிய வேளை எலுமிச்சங் காயை மணக்கவும் மூன்று வேளை தேனை நக்கவும்.

நோயாளி : அதுவும் ஒட்டாட்டி

 மருத்துவர் : என் கிட்ட வா

உடன்படாத உள்ளங்கள்


பெற்றவர்கள் சோதிடத்தில் தாலிவளம் பார்க்க
கண்டதே காதல் கொண்டதே கோலமெனப் பிள்ளைகள்
ஊரொன்று கூடிக்குவிய மணநாள் நல்வேளையில்
மணமகள் மாற்றானுடன் ஓட்டமெனச் செய்தி பரவுகிறது
"தேட்டமில்லாத தேடும் உறவுகள்..."

Wednesday 15 May 2013

நற்றமிழ் வெளிப்படுத்தாத வாய்கள்


அன்புள்ள நண்பரின் மணநாள் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிய "சாப்பாட்டுக்கு வாருங்கோ" என அழைத்தார்கள். இருப்பிடத்திற்குப் போய்க் குந்தினதும் பெரிய வாழை இலையைப் போட்டார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய் கறிகளைப் போடத் தொடங்கினர்.  "எப்பன் உண்டெனப் போடப்பா..." என்றொரு கிழம் சொல்லிச்சு. என்னவோ, பருப்புக் கறிக்கு மேலே "ஆனந்தம்" நல்லெண்ணை ஊற்றியதும் மூச்சுப் பேச்சின்றி எல்லோரும் மூக்கு முட்ட விழுங்கினர்.

வடை, சவ்வரிசிக் கஞ்சி (பாயாசம்) வழங்கியதும் உண்டு களித்துப் பின் எச்சில் இலையோட ஒரு கோடியில் வந்து, இலையை எறிந்து போட்டுக் கை கழுவிய பின் முன்றலில் கூடினர். அவ்வேளை உணவு வழங்கியோர் ஆளுக்கொரு "அணில்" குளிர்களி வழங்கினர்.

பிறகென்ன, உண்டு சுவைத்து ஆளுக்கொரு நொட்டை நொடுக்குச் சொல்லிச்சினம். "ஐஸ்கிறீம்" இற்கு "சுகர்" காணாதாம். கிழங்குக் கறி "டேஸ்ட்" இல்லையாம். மோருக்கு "சோல்ட்" கூடிப் போச்சாம். வாழை இலைக்குப் பதிலாக "பிளேட்" இல் தந்திருக்கலாமே என்றும் தொடர்ந்தனர்.

உண்ட வாயாலே கண்டதையும் சொல்லலாம். ஆனால், தமிழராய் இருந்து கொண்டு பிறமொழிச் சொற்களை இணைத்துப் பேசினால் தமிழல்லவா சாகிறது.

நானும் குளிர்களி உண்டு முடிய அன்புள்ள நண்பருக்குப் பரிசில்ப் பொதி வழங்கிப் போட்டு "எல்லாம் சிறப்பாக நடந்தது, மணநாள் சாப்பாட்டை மறக்கேலாது" என்று கூறி விடை பெற்றேன்.

நாட்டு நிலைமை


உழைப்புக்காக ஓடி ஓடிப் படித்தேன்
பிழைப்புக்காக உழைப்பைத் தேடி அலைந்தேன்
"நானோ சாவின் விளிம்பில்..."

பொய்


பெண்ணின் உள்ளத்தில்
என்ன இருக்கிறது என்று
அறிய முடியாது என்பது
பொய்!
ஆணுக்கும் அப்படியே!
ஆளுக்கொரு உள்ளம் -  அதில்
ஆயிரம் எண்ணங்கள் -  அதை
அறிய முயலும்
காளைகளே... வாலைகளே...
அன்பைக் கொடுங்கள்
நம்பிக்கை வையுங்கள்
விருப்பங்களுக்கு உடன்படுங்கள்
பிறகென்ன
பிறரது உள்ளத்தை அறிய
வேறேதும் கருவிகள் வேண்டுமோ?
ஆளுக்காள் -  தங்கள்
உள்ளங்களை அறிந்தால்
காதல் தானே!