Saturday 31 May 2014

கன்னியின் நிலை காண்பீரே!


ஆளும் பெரியவளாக மாறியும்
அறிவும் பெரிதாக மாறாமலும்
எவரையும் ஈர்க்கும் அழகு
எவரொருவர் பின்னோட உதவ
"ஓடியவள் செய்தி பாழாம்!"

வயசுக் கோளாறு வந்திச்சா
வயிற்றுப் பையோ நிரம்பிச்சா
பருவக் கோளாறு பத்திச்சா
அறிவுப் பையோ வத்திச்சா
"மணமுடிக்க முன் கருவுற..."

அகவை வந்த பின்னே
ஆணோடு பழகப் போய்
பெண்ணவள் மதியிழக்கப் பாரும்
வயிற்றினில் மூன்றாமாள் கருவுற
"ஈற்றினில் சாவை ஏற்றாளே!"

இடம்பெயர்ந்த நிலையில்...


இந்த நிலை எப்ப மாறுமோ - எங்கள்
சொந்த நிலை எப்ப உயருமோ - இறைவா
உந்தன் உள்ளம் உருகாதோ - நாளைக்கு
எந்தன் பிள்ளை குட்டிகள் வாழுமோ?!

Thursday 29 May 2014

இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?



இலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்டிக்கொண்டு "இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்ற கேள்விக்குப் பதிலைத் தேடுவோம்.

ஈரேழு தீவுகளைக் கொண்டமையால் தான் ஈழம் என்ற தமிழிலக்கியப் பெயர் இலங்கைக்கு வந்தது. "இல்" என்ற வேர்த் தமிழ்ச் சொல்லில் இருந்தே இலங்கை என்ற பெயரும் ஈழத்திற்குக் கிடைத்தது. இதில் எந்த அரசியலும் இல்லை. இலக்கியப் பெயராலமைந்த தமிழரின் நாடு என்பதையே வெளிப்படுத்துகிறது.

இராமாயணம் வால்மீகி அவர்களால் பிறமொழியில் எழுதப்பட்டது. அதனைத் தமிழில் அழகாக மொழிபெயர்த்தது கம்பன். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது கம்பனின் பாபுனையும் ஆற்றலுக்குச் சான்றாகும். அதில் இலங்கை முழுவதும் தமிழரின் நாடென்றும் இலங்கை அரசன்
இராவணன் எனும் தமிழனென்றே கூறப்படுகிறது.

தமிழரசன் இராவணன் ஆண்ட தமிழரின் நாடாம் இலங்கை மண்ணில் பௌத்தம், சிங்களம், சிங்களவர் எப்படிக் குடியமர முடிந்தது?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில், சித்தார்த்தனின் (புத்தரின்) வழிகாட்டல் வலுவானதும் சிறப்பானதும் எனக் கருதி (இன்றும் இதே நோக்கில் உலகெங்கும் பலர் புத்தரைப் பின்பற்றுகின்றனர்.) தமிழரும் இந்தியாவில் பின்பற்றத் தொடங்கினர். இந்தியாவில் புத்தரைப் பின்பற்றிய தமிழர் இலங்கைக்கும் கொண்டு சென்று பரப்பினர். இப்படித்தான் இலங்கையில் பௌத்தம் காலூன்றியது. இதன் அடிப்படையில் தமிழ்ப் பௌத்தத் துறவிகளே பௌத்ததை இலங்கையில் வளர்த்தெடுத்தனர்.

இந்தியாவில் சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில், ஆரியப் புரட்சி ஒன்று இடம் பெற்றது. அதன் பின் இந்தியாவில் பௌத்தம் பேணிய தமிழ்ப் பௌத்தத் துறவிகள் "சிங்களம் பயின்று தான் வழிபாடுகளை நிகழ்த்தலாம்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலை ஈழத்திற்கும் வந்து சேரச் சிங்களமும் இலங்கையில் காலூன்றியது. பின்னர் சிங்களம் பேசுவோர் சிங்களவராயினர். மேலும், தமிழர் பல்வேறு காரணங்களுக்காகச் சிங்களவராயினராம்.

இதற்கு மேலே நான் எதையும் கூறி நீட்ட விரும்பவில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் இலங்கைச் சிங்களவரின் முதற்குடி அல்லது முதற் தலைமுறை தமிழராகவே இருக்கின்றனர். எனவே, இலங்கை "சிங்களவருடையதா? தமிழருடையதா?" என்று அலசப் பல சான்றுகளைத் தேடினாலும் இறுதியில் ஈரேழு தீவுகளாம் ஈழம் அல்லது இலங்கை தமிழருக்குச் சொந்தமானது என்று முடிவு செய்துவிடலாம்.



போக்கு வரவு ஒழுங்குகள்



கேகேநகரில் ராஜமன்னார் வீதியும் முனுசாமி வீதியும் சந்திக்கின்ற இடத்தில் குப்பை போடப்படும் மூலைப் பக்கமாக ஓட்டுநர் தேர்வு நடக்கின்ற இடமும் இருக்கிறது. அந்தச் சந்தியில ஓடுகிற ஊர்திகளின் வேகத்தைப் பார்த்தியளோ? அதைவிட நம்மாளுகளின் கவனமின்மையையும் காணமுடியுமே!

இன்னும் சொல்லப்போனால் இவற்றைக் கண்காணிக்க பொறுப்பு வாய்ந்த எவரும் அங்கு நிற்பதில்லை. இலகுவாகப் போக்கு வரவு ஒழுங்குகள் மீறப்பட இடமிருக்கிறது. இதற்கு மேலேயும் சொல்லப்போனால் அந்த இடத்தில நடைபோடும் நம்மாளுகள் அக்கம், பக்கம் பாராமல் குறுக்கும் நெடுக்குமாக வீதியைக் கடக்க முனைவது நல்லதல்ல.

இந்த நிலை விபத்துகளை ஏற்படுத்தலாம் என்பதை நினைத்தால், என்னாலே தாங்கமுடியேல்லையே... நம்மாளுகள் எப்ப தான் இதனைப் பற்றி, அது தான் விபத்துகளை பற்றி சிந்திப்பபார்கள். அரசு, எப்ப தான் பொது மக்கள் உயிரிழப்பையும் விபத்துகளைத் தடுப்பது பற்றியும் சிந்தித்து நல்ல முடிவு எடுக்குமோ தெரியேல்லையே...

பொதுமக்களாகிய நாம், நமது உயிர் பெறுமதியானது. அதனைப் பேணுவது நமது கடமை என்றுணர்ந்து போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டும், பள்ளிக்கூடங்களில் போக்கு வரவு ஒழுங்கு முறைகளைக் கற்பிக்கப் பாடவேளை ஒதுக்க வேண்டும். மாணவர்கள், மாணவிகள் ஊடாக இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்வது இலகு.

பொதுப் பணி நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லாம் இணைந்து மக்களுக்குப் போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுமாறு வழிகாட்டலாமே. போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்றாதோர் அல்லது மீறுவோர் மீது காவற்றுறை கடும் நடவடிக்கை எடுக்கலாமே.

எல்லாவற்றையும் விட போக்கு வரவுப் பிரிவினர் அல்லது அரசு ஓட்டுநர் அனுமதி பத்திரம் வழங்கும் நடைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து சிறப்புத் தகுதி உடையோருக்கே அதனை வழங்க வேண்டும். விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான என் உள்ளத்தில் தோன்றிய சில எண்ணங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

Wednesday 28 May 2014

காஞ்சிபுரம் ஓரிக்கையூர் செங்கொடியே!


காஞ்சிபுரம் ஓரிக்கையூர் செங்கொடியே!
மூன்றுயிரைத் தூக்கிலிடாதே என்று
உன்னுயிரை முடிக்க
எப்படியம்மா துணிவு வந்தது?
அம்மா! தாயே!
உன்னிழப்பு எங்களை வருத்தலாம்
ஒருபோதும்
பதவிக்காரரின் உள்ளத்தில் மாற்றம் தராதே!
தன்னை ஒறுத்தல்(அகிம்சை)
மகாத்மா காந்தியொடு பறந்து போனபின்
சாவுக்கும் பெறுமதி இழந்து போயிற்று!
சாவாலே செய்தியைத்தான் பரப்பலாம்
தீர்வைப் பெறமுடியாதே...
வாழ்ந்து கொண்டு
அன்னா ஹசாராவைப் போல
வென்று காட்டலாமே!
இன்றைய தமிழருக்குத் தேவை
உயிரிழப்பல்ல...
தமிழரெனத் தலைநிமிர்ந்து வாழ
தமிழை அழியாமல் பேண
உயிர்களைப் படைத்துப் பெருக்குவதே!
செங்கொடியின் சாவொடு
தமிழினமே சாவை நிறுத்து!
ஒருவரது உயிரிழப்பை விட
உலகெங்கும் தமிழர்
தெருவில் இறங்கி முழங்குவதே
சரியான வழி...
அந்த நாள் எந்த நாளோ
அதுவே
செங்கொடிக்கு நாம் செய்யும் அஞ்சலி!

Monday 26 May 2014

சாப்பிட மட்டும் மறப்பியளே!


பள்ளிக்கூடத்தில ஆசிரியர், மாணவர் கேள்வி நேரத்தில நடக்கிற நாடகமிது.

ஆசிரியர் : எத்தனை திருக்குறள் வள்ளுவர் எழுதினார்?

மாணவர் - 1 : வள்ளுவரைத் தான் கேட்கணும்...

ஆசிரியர் : அவர் வரமாட்டாரடா...

மாணவர் - 2 : ஈரடி வெண்பா தானே எழுதினார்...

ஆசிரியர் : சரி! அது தான்டா எத்தனை?

மாணவர் - 3 : ஒன்றே முக்காலடி வெண்பா தானே எழுதினார்...

ஆசிரியர் : சரி! அது தான்டா எத்தனை?

மாணவர் - 4 : எண்ணிக்கொள்ள முடியவில்லையே!

ஆசிரியர் : திருக்குறள் பொத்தகத்தை விரித்தாலெல்லோ எண்ணலாம்...

மாணவர் - 4 : படிச்சேன், மறந்திட்டேன் ஐயா!

ஆசிரியர் : சாப்பிட மட்டும் மறப்பியளே!

மாணவர்கள் : வயிறு கடிக்கையில பசிக்குமையா...

ஆசிரியர் : அப்ப, அடி போட்டால் படிப்பை மறக்க மாட்டியளே

மாணவர்கள் : (அமைதியாக இருந்தனர்)

ஆசிரியர் : இப்ப சொல்லுறன்... வள்ளுவர் 1330 திருக்குறள் எழுதினார்! நாளைக்குக் கேட்கையிலே சொல்லாவிடில் நெருப்படி தான் போடுவேன்.

மாணவர்கள் : நாளையான் நேரவிரிப்பில் நாலடியார் ஐயா!

ஆசிரியர் : அடுத்த நாள் கேட்டிட்டு அடிப்பேன்டா...

புரிதல் வேண்டும்

நினைக்கிற நினைப்பில
கிடக்கிற பழசுகள்
உள்ளத்தைப் புண்படுத்துமே தவிர
இனிதாக எதனையும்
உன்னில் ஏற்படுத்தாதே!
படிக்கிற படிப்பில
பார்க்கின்ற பார்வையிலே
நுகருகிற அறிவில
புரிகிற உணர்வில
உன்னிலே தெளிவு வந்திடுமே!
பின்விளைவைக் கற்றிடு
பக்கவிளைவைக் அறிந்திடு
நேர்விளைவில் கண்டிருப்பாய்
பகுத்தறிவு இதுதானென்று!
உலகமே உனக்கொரு தூசு
பின்னைப் பொன்னெனப் பகுத்தறி
முன்னைக் கொஞ்சமாயினும் மறந்திடு
இன்றே தென்படும் உனது வெற்றி!

Sunday 25 May 2014

அள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா?

இன்றைய உலகில் இணையத் தளங்களைப் பயன்படுத்தாத எவருமே இல்லை என்றே சொல்லலாம். அதேவேளை பயனாளர்களை ஏமாற்றும் இணையத் தளங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இப்படியான சூழ்நிலையில் பயனாளர்களுக்கு பணம் தருவதாகக் கூறிப் பல இணையத் தளங்கள் விளம்பரம் செய்கின்றன. அவர்களின் செயற்பாட்டை affiliated program என்கிறார்கள். அதற்கு நாம் ஒர் இணையத் தளம் நடாத்த வேண்டுமாம். அத்தளத்தில் அவர்களது நிகழ்நிரலை (program)ச் சேர்க்க வேண்டுமாம். அதன்படிக்கு அவர்களது இணைப்பைச் சொடுக்கினால் (click); புதிய வருகையாளர் எண்ணிக்கைக்கும் புதிய கணக்கைத் திறப்போர் எண்ணிக்கைக்கும் பணம் டொலரில் வழங்கப்படும் என (google adsence, google adword உட்பட ) பல இணையத் தளங்கள் தெரிவிக்கின்றன.

நம்மாளுகள் அதிகம் இலவச இணையத் தளங்களைப் பயன்படுத்துவதால், அவற்றில் எல்லாம் இதற்கு உடன் படுவதில்லை. சில இணையத் தளங்கள் தமது தளத்தில் கணக்கைத் திறந்து வணிகம் செய்தால் தரகுப் பணம் தருவதாகக் கூறி, பதிவுக் கட்டணமாக 10-100 டொலர்கள் கறக்கிறார்கள். இப்படியான பல இணைய வணிக முறைகள் காணப்படுகின்றன. வருவாய் கிட்டுமென நம்பி, ஓய்வு நேர மேலதீக வருவாயெனப் பலர் இவ் இணைய வணிக முறைகளில் இறங்கலாம்.

நம்மாளுகள் பணத்தைக் கொட்டிப் பிச்சை எடுக்காமல் வருவாய் ஈட்டக்கூடிய இணைய வணிகம் பற்றி, இணையத்தள நுட்பவியலாளர்களே கொஞ்சம் உதவுங்களேன். சிறந்த இலவச இணையத் தள வழங்குனர்கள் (free web servers) மற்றும் பணம் வழங்கும் இணையத் தளங்கள் (affiliated program providers) விரிப்பைத் தருவதோடு, எவ்வாறு இதன்படிக்கு இணையத்திலிருந்து வருவாய் ஈட்டலாம் என்பதை விளக்குவீர்களா? இதனால், நம்மாளுகள் பிச்சை எடுக்கத்தான் முடியும் வருவாய் ஈட்ட இயலதென விளக்குவீர்களா?

என் துயரக் கதையைக் கேளுங்களேன். http://cashperclicks.tk என்ற தளத்தில் பல பணம் தரும் விளம்பரங்களை தொகுத்துப் போட்டேன். ஐம்பது டொடலர் பணம் திரண்டுவிட்டது. ஆனால், அதனை வேண்டியெடுக்க கண்டறியாத சர்வே செயற்பாட்டை நிறைவேற்றணுமாம். முக்கி முக்கிப் பார்த்தேன் முடியவில்லையே! இவ்வாறு நீங்களும் ஏமாறாதீர்கள். நானும் நம்பிக்கையான விளம்பரதாரர்களை இணைக்கலாமென http://cashperclicks.tk என்ற தளத்தைத் தொடர்ந்தும் நடாத்துகிறேன். ஏனெனில், பலர் இவ்வழிகளில் பணம் ஈட்டுகிறார்களே!

எதுவாயினும் இவற்றிற்கான விளக்கத்தைத் தங்கள் படைப்பாகத் தயாரித்து தங்கள் வலைப்பூக்களில் பதிவு செய்யுங்கள். பின், அதன் இணைப்பைப் பின்னூட்டமாக இங்கு தெரிவிக்கலாம். இது பற்றிய விளக்கம் அளிக்கும் தளங்கள் இருப்பின், அதன் இணைப்பைத் தெரிவிக்கலாம். எப்படியாயினும் நம்மாளுகள் நன்மை அடையக்கூடிய வழிகாட்டலைத் தங்களிடம் எதிர்பார்க்கின்றேன். இதில் மிகவும் முக்கியமானது, நம்மாளுகள் paypal, credit card, master card, visa card கணக்கு இலக்கத்தை வழங்கிய பின், இணைய நிறுவனங்களால் பணம் பறிக்கத் தொடங்கியதும் கண்ணீர் விடுவதைத் தடுக்கவல்ல வழிகாட்டலாக அமைய வேண்டும்.

இப்பதிவை (சிறு மாற்றங்கள் செய்யுமுன்) இணைய உலகில் என்னை அடையாளப்படுத்திய தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவு செய்த வேளை நண்பர் வினோத் - கன்னியாக்குமரி அவர்கள் தெரிவித்த கருத்தைக் கீழே இணைக்கின்றேன். நண்பர் வினோத் அவர்களும் மென்பொருள், வலைத்தள வடிவமைப்பாளர் என்ற வகையில் தனது தொழில்நுட்ப மதியுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

"பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் இருக்கிறது. இணையம் வந்த பின்பு இவ்வழிகளின் எண்ணிக்கை மிக அதிகமாயுள்ளது.
ஏமாற்றுப்பேர்வழிகள் இணையம் மூலம் ஏமாற்றி பணம் சம்பாதிப்பது அவர்கள் கண்டு பிடித்த இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி. பலர் இணையம் மூலம் ஏதாவது பெயர் சொல்லி "Donation" வாங்குகிறார்கள். பலர் சுனாமி வந்த போது தொண்டு நிறுவனங்களுக்கு இணையம் மூலம் வந்த காசுகள் ஏராளம். நியாயமாக சம்பாதிக்க வேண்டுமென்றாலும் இணையம் கைகொடுக்கும்.

சாதாரணமாகக் கடை வைத்திருப்போர்கள் இணையத்தில் கடை விரித்தால் இணையம் மூலம் வாங்குவோர்களையும் கவர முடியும். இதற்கு இணைய வணிகம் (E-Commerce) இணைய வசதிகள் மூலம் செய்யலாம். அல்லது ebay தளம் மூலம் செய்யலாம். ஆனால் நம்மிடம் விற்க ஏதாவது இருக்க வேண்டும்.

வேலை செய்யத்திறமை இருந்தால் இணையத்தில் வேலை செய்துகொடுத்து சம்பளம் வாங்கலாம். உதாணமாக தட்டச்சு போன்ற வேலைகள். ஆனால் இதில் பலர் ஏமாற்றுப்பேர்வழிகளே. வேலை செய்து கொடுத்த பின் காசு வராது. ஏதாவது பிழை சொல்வார்கள்.
ஆனால் அமேசான் தளம் http://www.mturk.com/mturk/welcome பல வேலைவாய்ப்புகளைக் கொடுக்கிறது.

கணினி மென்பொருள் அல்லது இணைய தள வடிவமைப்பு வேலைகள் என்றால் elance.com, odesk.com, freelancer.com போன்ற தளங்களில் பார்க்கலாம். அடுத்து பங்கு சந்தையில் பணம் போட்டு எடுத்தல். இது பற்றி எனக்கு அவ்வளவாக அறிவு இல்லை. மற்றுமொரு முக்கியமான வழிமுறை விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது.

நம் வலைத் தளத்தில் கூகிள் போன்ற பிரபல விளம்பர கம்பனிகளின் விளம்பர நிரலை இணைத்துவிட்டால் அவை நம் வலையின் பயனாளர்களுக்கு விளம்பரங்களைக்காட்டும். அதை எத்தனை பேர் கிளிக்குகிறார்கள் என்பதைப்பொறுத்து நமக்கு காசு கிடைக்கும். நிறைய பேர் வந்து படிக்கும் வலை தளமாக இருந்தால் தான் இதனால் பலன் கிடைக்கும். மேலும் தகவலுக்கு google.com/adsense. மேலும் பல வழிகள் இருக்கலாம்." என நண்பர் வினோத் - கன்னியாகுமரி அவர்கள் தங்கள் மதியுரையைப் பகிர்ந்தார்.

இணையத்தில் நல்ல வருமானம்

ஒருவர் : இணையத்தில் வருவாய் கிட்டுமென Credit Card கணக்கால பத்து டொலர் வெட்டினால் பரவாயில்லை எனப் பதிவு செய்திட்டேனே...

மற்றவர் : அட முட்டாளே! இப்ப உன்னுடைய பணம் முழுவதும் வெட்டி எடுத்து முடிச்சிடுவாங்களே!

Thursday 22 May 2014

மின்நூல்கள்

அறிஞர்கள் - தங்கள்
அறிவைப் படைத்திருக்க - அவை
அச்சு நூல்களாகவோ மின்நூல்களாகவோ
எம் கைக்கெட்டலாம் - அவை
எம் அறிவைப் பெருக்க உதவுமே!
அறிவைப் பெருக்கலாம் என்பது
அறிவில் விருப்பம் / நாட்டம் உள்ளோருக்கு மட்டுமே
இலகுவாயிருக்கும் என்பேன்!
பெற்றோர்களிடமோ
நண்பர்களிடமோ
ஆசிரியர்களிடமோ
ஊடகங்களிடமோ இருந்து
நாம்
அறிவைப் பெறுவது போலவே
மின்நூல்களைப் படித்தும்
பயனீட்டலாமே - ஆனால்
கைக்குள் அடங்கி நிற்கும்
அச்சு நூல்களைப் போலல்லாது
கணினி வழியே படிக்க முடிந்தாலும்
அறிவைப் பெருக்கும் வழி ஒன்றே!
பொதுவாக, முடிவாகச் சொல்வதாயின்
அறிஞர்களின் அறிவைத் திரட்ட
நம் அறிவைப் பெருக்க
நல்லதோர் ஊடகம் மின்நூல்களே!

மேலும் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
மின்நூல்கள் பயன்தருமா?
http://yppubs.blogspot.com/2014/05/blog-post_23.html

Monday 19 May 2014

பாவலனும் கண்ணாடியும்


திருநீற்றுக் கீறுகள்
சந்தன, குங்குமப் பொட்டுகள்
சிவப்பு, வெள்ளைப் பூசல் மாக்கள்
கரிப்பொட்டு, ஒட்டுப்பொட்டு என்பன
ஒட்டி, அப்பி, பூசி, மெழுகி இருந்தும்
மூக்கை அரிக்கும் மணம் கொண்ட
எண்ணெய், தண்ணி தெளித்து
ஆணும் பெண்ணும்
அழகு பார்க்கும் வேளை
முகம் பார்க்க உதவும் கண்ணாடியே
உனக்குள் என்ன தோன்றும்
எனக்கும் சொல்லித் தந்தால்
என் பாட்டில் வடிப்பேனே!

பச்சைத் தண்ணீர் பட்டால்
உடம்பு தேயும் என்போர்
உடுப்புத் துவைத்தால்
கிழிந்து போகும் என்போர்
குளிப்பு, முழுக்கு இன்றி
நாறும் பொன் மேனிக்கு
செயற்கை அழகு பூசுவோர்
தான் வெறுக்கும் தன் கறுப்பை
மூடி மறைக்க முனைவோர்
உள்ளத்தில் ஊறும் காதல் உணர்வால்
இத்தனை முகங்களையும் கடந்து
எத்தனை, எத்தனை முகங்கள்
தம்மை நோக்கி நாடுமென
அழகு சேர்க்கும் செலவாளிகள்
எல்லோரும் என்னைப் பார்க்கையில்
அவரவர் முகவரிகளை
அச்சொட்டாக அப்படியே கூறும்
என் பணியை - பாவலனே
உன் பாட்டில் வடிக்க
உன்னாலே முடியாதென்றது
முகம் பார்க்க உதவும் கண்ணாடி!

பசித்தாலும் காதல் தான்

ஒருவர் : பசிக்குதடா... சாப்பிட உதவேன்டா?

மற்றவர் : அழகுப் பெண்கள் அல்ல, அசட்டுப் பெண்கள் போகும் வழியில் நின்றால் காதல் செய்வதாய் நடித்துத் தேனீர்க் கடைக்கு இழுத்துச் சென்றால், அவர்களே வேண்டித் தருவாங்களே...

Friday 16 May 2014

சாட்டுகளுக்கு வேட்டு வையடா!

அடடே!
விடிய விடிய
பள்ளிக்குப் பிந்தினால்...
வேலைக்குப் பிந்தினால்...
எதுவும் சறுக்கினால்...
எண்ணற்ற சாட்டுக்களை
ஆளுக்காள்
அடுக்குவதைப் பார்த்தீர்களா?

"ஆடத் தெரியாதவளுக்கு
அரங்கு(மேடை) சரியில்லையாம்"
என்றாற் போல
"பாடத் தெரியாதவனுக்கு
இருமல், தடிமன், காய்ச்சல்"
என்றாற் போல
எதற்கெடுத்தாலும்
சாட்டுச் சொல்லித் தப்ப நினைப்பது
"காலத்தைக் கோட்டை விட்டது" என்று
பொருள் கொள்ளடா!

அட போடா!
எல்லாம் முடிஞ்சு
தோல்வி கண்ட வேளை தான்
அதை, இதை, உதை
மறந்திட்டேனே என்கிறாய்...
செயலில் இறங்கு முன்
எண்ணிப் பார்த்திருக்கலாம்...
காலம் கடந்து வந்த அறிவு
ஏதுக்கடா உதவும்?

எல்லாம் தோற்ற பின்னே
எனது ஊழே(விதி) என்று
யாருக்கடா
அமைதி பேணு என்கிறாய்...
"ஊழை(விதியை)
அறிவாலே(மதியாலே) வெல்லு" என்பது
"சாட்டுகளுக்கு வேட்டு வையடா" என்று
அடிக்கடி நினைவூட்டத் தானேடா!

என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக


"படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்" என்பது போலச் சிலர் இருப்பர். அப்படித் தான் ஒரு வீட்டில இப்படி நிகழ்ந்து விடுகிறது.

மனைவி : மணமுடித்த பின் காதலிப்பது சரியா?

கணவன் : மணமுடித்த பின் காதலிப்பது சரியென்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே!

மனைவி : அது தாண்டா...
                     அவர் சொன்னது சரி தாண்டா...
                     நீ செய்யிறது தாண்டா பிழை!

கணவன் : நான் பிழை விடேல்லையே...

மனைவி : பிழை விடேல்லையோ? என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக, தெரு விலைப்  பெண்ணைக் காதலிக்கிறியே!

கணவன் : காதல் கண்ணைத் தான் மறைக்கும் என்பார்கள் - அது
                      கட்டின பெண்டிலையும் மறக்க வைக்குதே!

மனைவி : இனியாவது, உன்ர அறிவுக்கண்ணைத் திறந்து பாரடா...

கணவன் : தாயே! என்னை மன்னிச்சிடு தாயே!

கணக்கில என்ன பிணக்கு?


ஆசிரியர் : என்னடா மோனே கணக்கில குண்டு அடிச்சிட்டியாமே?

மாணவர் : ஒன்றுக்கு நூறு முறை திரும்பத் திரும்ப வாசிச்சுப் போட்டுப் போயும் தேர்வுத் தாளில் ஒரு கணக்கும் வரேல்லையே...

ஆசிரியர் : ஒரே வகையில் ஒன்றுக்கு நூறு கணக்குகளை வாசிச்சுச் செய்து பார்த்திட்டுப் போயிருந்தால், வந்த புதுக் கணக்குகளைச் செய்திருக்கலாமே...

மாணவர் : வாசிக்க முடியுது, செய்ய முடியேல்லையே...

நேரம்

நேரம் பொன்னானது. அதனை முறையாகப் பயன்படுத்தியவனே உலகிலேயே வெற்றி பெறுகின்றான்.

Tuesday 13 May 2014

கடத்தல் கமுக்கம்

தோழி 1: அடிக்கடி பிள்ளைத்தாச்சி ஆகிறாய்... அடிக்கடி பிள்ளை பெற்றுக் கொள்கிறாய்... இரண்டு பிள்ளைக்கு இடையே மூன்று ஆண்டு இடைவெளி வேண்டுமடி...

தோழி 2: அடியே! அடிக்கடி பிள்ளை பெற நான் இன்னும் இடிஅமீனைக் கட்டவே இல்லையடி! நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தங்கம் கடத்தவே பிள்ளைத்தாச்சி ஆகிறேன்.

நிறங்கள்

கறுப்பு
துக்கம், துயர அடையாளமுமல்ல
வெள்ளை
சுத்தம், சுக அடையாளமுமல்ல
நிறங்கள்
பார்வைக்கு அழகாக இருக்கட்டும்
நிறங்களுக்கு
பொருள் கற்பிக்க வேண்டாம்
தன்னம்பிக்கை தான்
எம் வலிகளைப் போக்கிட
நல்ல மருந்து என்பேன்!

மறக்கமுடியவில்லையே!


முதலாமாள்: உங்களால் மறக்க முடியாதது எது?

இரண்டாமாள்: "காசில்லாதவனுக்கு எல்லாம் காதல் வருகுதோ" என்ற கேட்ட பெண்ணை.

முதலாமாள்: உங்கட பாதிப்பின் வெளிப்பாடு! யார் அந்தப் பெண்?

இரண்டாமாள்: வேறு யார்? அப்பன், ஆத்தாள் பேசிச் செய்து வைத்த பெண்; என் இல்லாளே!



Saturday 10 May 2014

உண்மையில்...

அன்பும் காதலும்
இலவசமல்ல...
ஏற்கும் உள்ளத்தின் விருப்பமே!
பண்பும் பற்றும்
நல்லவர்களின் நடத்தை
ஆயினும்
ஏமாற்றுவோரின் மருந்தும் ஆகிறதே!
அன்பும் காதலும்
உறவை ஏற்படுத்த உதவினாலும்
பண்பும் பற்றும் தானே
உறவைப் பலப்படுத்த உதவுகிறதே!
அன்பும் காதலும் பண்பும் பற்றும்
இல்லாத உள்ளங்களால்
மனிதஉறவை
நன்றே பேண முடியுமா?

கண்ணாடி

ஒருவர் : மூக்குக் கண்ணாடியை ஏன் தலையில மாட்டுறாங்க?

மற்றவர் : கண் பார்க்காட்டிலும் தலைமுடி பார்க்குமென்று தான்...

பறக்கும் பணம்

ஒருவர் : என்னங்க... பணத் தாள்களைப் பறக்க விடுகிறியளே...

மற்றவர் : தேர்தலுக்காக அல்ல, கறுப்புப் பணம் பிடிபட்டிடும் என்பதற்கல்ல, "காசேதான் கடவுளடா" எனும் படத்திற்காக... எல்லாம் நிழற்படி(photo copy) எடுத்ததே

Friday 9 May 2014

இலங்கை அழுகிறது...

இலங்கையின் நல்ல எதிர்காலத்தை
தங்களால் தான்
கட்டியெழுப்ப முடியுமென
நாளுக்கொன்றாய்... ஆளுக்கொன்றாய்...
கட்சிகளும் கொடிகளும் பெருகினதே தவிர
அமைதிக்கான தீர்வு எதனையும்
எவரும் முன் வைத்ததில்லையே!
நாடாளுமன்றம் செல்லும் மட்டும்
மக்கள் நலன் பேணுவதாய் நடித்தனர்
நாடாளுமன்றுக்குள் நுழைந்ததும்
நாற்காலிகளின் நலன் பேணப் படித்தனர்
வாக்குக்கேட்ட இப்படிப்பட்டவர்
துன்புற்றுக் கண்ணீர் வடிக்கும்
மக்களைக் கண்டு கொள்ளாததால்
இலங்கை மண் அழுகிறது...!
இலங்கையில் அமைதி தோன்ற
இப்படிப்பட்ட தலைமைகளை
நம்பிப் பயனில்லையே!
நம்பிக்கையை மருந்தாகக் கொண்டு
இட, இன, மத வேறுபாடின்றியே
தேனொழுக அன்பாகப் பழகியே
மக்கள் எல்லோரும் தாமாகவே
ஒன்றிணைவதால் மட்டுமே
இலங்கை மண் அழுவதை நிறுத்தி
அமைதியை ஏற்படுத்த முடியுமே!
நாளைய தலைமுறை
மகிழ்வோடு நலமாக வாழ
நாட்டில் அமைதி தோன்ற வேணுமே!

Friday 2 May 2014

மக்களாயம் (சமூகம்) என் பார்வையில்

தாய் வயிற்றில் நான் பிறந்தேன்
தாய் மண்ணில் வந்து தவழ்ந்தேன்
தாய்¸ தந்தை வளர்ப்பில் நிமிர்ந்தேன்
காலத்தின் கட்டளைக்குப் பள்ளிக்குப் போனேன்
காலம் கரைய நானும் மாறினேன்
நண்பர்கள் பலருடன் பழகி இணைந்தேன்
நண்பர்களால் பலதும் கற்க முனைந்தேன்
வீட்டுக்கு வீடு நுழைவுப் படிதான்
வீட்டுக்கு உள்ளே ஆளுக்கு ஆள்தான்
நடத்தையும் செயலும் வேறு வேறுதான்
நாட்டிலும் ஆளுக்கு ஆள் இப்படித்தான்
கொஞ்ச ஆள்கள் படிப்பில் அக்கறைதான்
கொஞ்ச ஆள்கள் விளையாட்டில் முயற்சிதான்
கொஞ்ச ஆள்கள் இரண்டிலும் முன்னோடிதான்
எஞ்சிய கொஞ்சம் போல்லாத குழப்படிதான்
நல்ல சூழலில் சிக்கிய எல்லோருந்தான்
மெல்லச் சூழலில் சிறந்தவர் ஆயினர்தான்
பிழையான சூழலில் சிக்கிய ஆள்கள்தான்
பிழைக்க உழைப்பு இன்றியே நின்றவர்தான்
இன்றைய சூழலையே மாற்று வழிக்குத்தான்
இன்றுமே இழுத்துச் செல்வதைப் பார்ப்பீர்தான்
புகைத்தல்¸ குடிப்பொருள்¸ விலைப்பெண் இன்னும்தான்
பகைத்தல்¸ பொருட்பறி, அழித்தல் இன்னும்தான்
கொல்லுதல், கெடுத்தல், மணமுறிப்பு இன்னும்தான்
கொல்லையில் கள்ளத்துணை, மறுமணம் இன்னும்தான்
சொல்லில் எடுத்துக்கூற எத்தனையோ இருக்குத்தான்
எல்லாம் எங்கள் மக்களாயத்திலிருந்து ஒழியத்தான்
ஒழுக்கம் உயர்வைத் தரும் என்றுதான்
இழுக்கு இன்றி நாடு உயரத்தான்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றுதான்
ஒன்றிணைந்து எல்லோரும் செயற்பட்டால் முடியுந்தான்
பின்னேறி உள்ளோரை முன்னுக்குக் கொண்டுவரத்தான்
இன்றே பள்ளிகளிலும் படித்தவர்களாலும் தொடர்ந்தால்தான்
நன்றே அரசாலும் பெரியோராலும் முயன்றால்தான்
நாளைய சமூகம் நன்றே மாறுந்தான்
நாளைய விடியலில் மக்களாயம் மேம்படத்தான்
எங்கள் நாடும் சிறந்து விளங்குந்தான்
எங்கள் மக்களாயமென் பார்வையில் இப்படித்தான்
எங்களுக்கு எப்பவும் இருக்கவேணும் என்பேன்!