Thursday 31 July 2014

விலை மகளுக்கு இலை போடாதீர்


போக்குவரவு என்றால்
தடைகள் ஆயிரம் வரலாம்
அதுபோலத் தான்
வாழ்க்கையிலும்
ஆயிரம் தடைகள் வந்து மோதலாம்!
தடைகளைக் கடந்தால் தான்
போக்குவரவும் இடம்பெறுவது போல
வாழ்க்கையிலும்
எதிர்ப்படும் தடைகளைக் கடக்கவேணுமே!
தடைகளைக் கடக்க முடியாது போனால்
தடைகளுக்குள்ளேயே
முடிந்தவரை வாழ முயற்சி செய்யலாமே!
தடைகளைக் கடக்க முடியா விட்டாலும்
முடிந்தவரை முயன்றும்
தடைகளுக்குள்ளேயே வாழ முடியா விட்டாலும்
சாகவேண்டுமே தவிர
விலை மகனாகவோ
விலை மகளாகவோ முடியாதே!
விலை மகனாரை விட
விலை மகளாரே நாட்டிலே அதிகம்...
ஆணென்றால்
எந்தத் தொழிலையையும் செய்யலாமென்றால்
சரிநிகர், சமநிலை கேட்கும் பெண்கள்
எந்தத் தொழிலையையும் செய்ய முடியாதோவென
கழிவுறுப்பு வாடகைக்கு விடுவது சரியா?
எவர் வாய்க் கேட்பினும்
எவர் தான் எப்படிச் சொன்னாலும்
பெண் பக்கம் தவறு என்றால்
அவளை
ஊரே ஒதுக்கி வைப்பதால் தான்
கோழைப் பெண்கள்
தெருக்கோடியில் விலைமகளாக
அலைவதைப் பார்க்க முடிகிறதே!
கோழைப் பெண்களே
உங்கள் தொழில் உறுப்புக்கு
பொன்(தங்க) நகை அணியும் வழக்கம்
(பழைய இலக்கியங்கள் கூறுகிறது)
ஏன் இருந்தது தெரியுமா?
வாடகைக்கு விடுவதற்கல்ல
வழித்தோன்றலைத் தருவிக்கவென்றே
உங்கள் புனித உறுப்பைப் பேணவே!
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே
சொல்லப்பட்டது...
ஆனால்
ஆளுக்காள் தவறிழைத்த பின்
பெண் மீது பழி போடலாமோ?
ஆண் சிங்கங்களே
ஆண்மையை அடக்கியாள முடியாமல்
தெருக்கோடி விலைமகளை நாடி
பாலியல் நோயை மட்டுமல்ல
குடும்பப் பிரிவையும் தேடி வரலாமோ?
போதாக்குறைக்கு
மாற்றான் பெண் சீர்கெடத் துணைபோவதா?
இவை தானா
ஆண் சிங்கங்களின் ஆண்மை!
பெண்ணைப் பெற்றவர்களே
சற்றுச் சிந்தித்துப் பாருங்களேன்...
உங்கள்
குலமகள் தவறிழைத்தால்
சீர் திருத்தி வாழவையுங்களேன்...
தவறிழைத்த குலமகளை
நீங்கள்
ஒதுக்கி வைப்பதால் தானே
விலை மகளாகப் புறப்படுகிறாளே...
சீர் திருத்தியும்
குலமகளாக வாழாத
விலை மகளுக்கு இலை போடாதீர் - அது
எம்மைப் படைத்த ஆண்டவனுக்கே
பிடிக்காத ஒன்றே!
கழிவுறுப்பு வாடகைக்கு விடும்
தொழிலை ஒழிக்க
பெண்ணைப் பெற்றவர்கள்
விலை மகளுக்கு இலை போடா விட்டாலும்
ஆளாளுக்கு ஏற்ற பொறுப்பை
நிறைவேற்றினால்
நாளாக நாளாக
என் மகளும் விலை மகளாகாள்
நாடெங்கிலும் உள்ள
விலை மகளும் குலமகளாவாளே!

ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிறது?


கதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் எப்படிப்பட்ட கதை நம்மாளுகளுக்குப் பிடிக்கும்.

 நகைச்சுவைக் கதை
 துப்பறியும் கதை
 வரலாற்றுக் கதை
 அரசர் கதை
 இறைபக்திக் கதை
 சண்டைக் கதை
 சதை காட்டும் ஆடல் கதை
 இசையும் பாடலும் கூடிய கதை
 பிறமொழிப் படக்கதை
 கருவற்ற கதை(மாசாலா)

இன்றைய நிலையில் உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.

Wednesday 30 July 2014

அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?

ஒரு கட்சிச் செயலகத்தில் நடந்த நாடகம்

கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...

கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.

கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...

கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.

கட்சித் தொண்டன் : அதெப்படி?

கட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.

கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...

நாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா?

சம்மிலி: என்னக்கா... சாமிலி, நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பையோட வாறாங்களே!

சாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...

Tuesday 29 July 2014

வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்

முல்லைப் பெரியாற்று அணையாலே
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாக்காரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாக்காரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு
விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப்படுத்தவே!
ஓர் இனம் ஒரு வேண்டுகோள்
என்றிருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர் கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள் ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!

பணம் பத்தும் செய்கிறது

வானிலே
கடலிலே
காற்றிலே
காட்டிலே
மேட்டிலே
வீட்டிலே
பள்ளியிலே
மத வழிபாட்டு இடங்களிலே
அரசப் பணி இடங்களிலே
அடடே
அரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே
காதலிலே
திருமணத்திலே
பிள்ளைப் பேற்றிலே
மருத்துவ மனைகளிலே
சுடுகாட்டிலே
இடுகாட்டிலே
நடுவழியிலே
எடுத்துக்காட்டாக
எத்தனை எத்தனை
இன்னும் உள்ளனவோ
அத்தனையிலும்
பணம் இருந்தால் போதும்
வென்றுவிடலாம்...
ஆண்டவனை வழிபடக் கூட
பணம் வேண்டினால் - ஏழை
பணம் வைத்திருப்பவனையா
வழிபட வேண்டும்?
அட கடவுளே...
பணம் பத்தும் செய்யுமென்றால்
ஏழைகள்
கடவுளை வழிபடாமல் இருக்கவும்
பணம் குறுக்கே வந்து நிற்கிறதே!

2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.

Sunday 27 July 2014

உள்ளப் புண்

சொல்பவர்கள் எல்லோரும்
சொல்லலாம் எதையும்
சொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்
சொல்ல முடிந்தால் விளையும்
"உள்ளத்திலே புண்!"

மறக்க நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை
உறங்கவிடாத உள்ளம்
உறங்கமுடியா நோவு
"உள்ளத்துப் புண்!"

Saturday 26 July 2014

வேலிகள்

எனக்கும் விருப்பம் தான்
வேளைக்கே செத்துவிடத்தான்
ஆனால்,
படைத்தவன் தான்
இன்னும்
என்னை அழிக்க முன்வரவில்லை!
எனக்கும் விருப்பம் தான்
அடிக்கடி தவறுகளைச் செய்துவிட
மக்களாயம்(சமூகம்) தான்
ஊசிக் கண்ணால உற்று நோக்குதே...
சரி... சரி... கமுக்கமாக (இரகசியமாக)
ஏதாச்சும் செய்யலாம் தான்
தவறு செய்யத் தெரிந்தாலும்
பிடிபடாமல் இருக்கத் தெரியாதே!
எனக்கும் விருப்பம் தான்
தலைவனாகத் தான்
ஆனால்,
முன்னுக்குப் போய்
முகத்திலே கரி பூசாமலே இருக்கத் தான்
இன்னும்
தொண்டனாகவே இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
நாட்டை ஆளத்தான்
நான் ஆட்சிக்கு வந்தால்
எல்லோருக்கும்
சம உரிமை கிடத்தாலும் என்றே
முதலாளிகள் எதிர்ப்பதால் தான்
ஊருக்குள்ளே,
வீட்டிற்குள்ளே,
வீட்டு மூலைக்குள்ளே
முடங்கி இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
வானில் உலாவும் பகலவனைப் போல
உலகை ஆளத்தான்
நான் உலகை ஆண்டால்
எல்லா நாடுகளும்
சம வளம் பெற நேர்ந்தால்
தங்கள் வயிறு கடிக்குமென அஞ்சியே
தாய் நாட்டில்
எனக்கு
வீட்டுக்காவல் போட நினைப்பது
வல்லரசுகள் ஆயிற்றே!
எனக்கும் விருப்பம் தான்
சூழவுள்ள மக்களுக்கு
நல்லது செய்யத் தான்
ஆனால்,
சுவாமி விவேகானந்தர் சொன்னார்
"உன்னைத் திருத்திக் கொள்
சூழவுள்ள மக்கள்
தாமாகவே திருந்துவார்கள்" என்றே
என்றாலும்
என்னைத் திருத்தப் பார்க்கிறேன்
இன்னும் முடியவில்லையே!
எல்லோருக்கும் விருப்பம் தான்
எல்லாமும் செய்யத் தான்
என்றாலும் பாருங்கோ
சாட்டுகளைப் பொறுக்கி
சறுக்கப் பல ஆளுங்க...
உயிரினை ஈகம் செய்திடத் துணிந்தே
எல்லாமும் செய்திட
முன்னிற்பவர் சில ஆளுங்க...
இப்படித் தான்
நம்மாளுங்க இருந்தால்
எப்படித் தான்
நம்ம வீடும் நாடும் உலகும்
மேம்பட்டு அமைதிக்குத் திரும்பும்...
எனக்கு ஒன்றும் புரியவில்லையே!

அந்த இரவில் என்ன நடக்கும்?

இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!

Friday 25 July 2014

ஈழம் சிங்கள நாடாகிறது...

ஈழம் எங்கும்
தமிழர் வாழ்ந்த காலம் போய்
தமிழர் இடங்களுக்கு
சிங்களப் பெயர் சூட்டி
அரசும் அரச காவலர்களும்
சிங்களவரைக் குடியேற்றுவது தொடர...
பிள்ளையார் வீற்றிருக்கும்
அரச மரங்களிற்குக் கீழே
புத்தரை இருத்தி
பௌத்த கோவில்களையும் கட்ட...
ஈழம் சிங்கள நாடாகிறது...
ஈழத் தமிழர்
ஏதிலியாக உலகைச் சுற்ற
தமிழ் தலைவர்கள்
தூங்கிக் கொண்டிருக்கையில்
விடிய விடிய
எதிர்த்தவர் புலியெனச் சாகடித்து
ஈழம் எங்கும் சிங்களத் தலைகள்
நீளத் தொடங்கி விட்டன...
காலப் போக்கில்
எஞ்சியோரையும் சிங்களம் விரட்டினால்
வெளிநாட்டிலும் இடமில்லாட்டி
நடுக்கடலில்
விழவேண்டிய நிலை தான்
ஈழத் தமிழருக்கு - இந்தச் செய்தி
உலகத் தமிழரின் காதுக்கு எட்டுமா!

Thursday 24 July 2014

ஐயாயிரம் உரூபா

நம்மூர் வானொலி ஒன்றில்
தேர்வுத் தாளோடு ஐயாயிரம் உரூபா
மட்டுமல்ல
மடல் ஒன்றும் இணைக்கப்பட்டதாகவும்
தேர்வுத்தாள் திருத்துபவர்
சொன்னதாகச் செய்தி சொல்லப்பட்டது.
காதுக்கு எட்டிய செய்தியைக் கேட்டதும்
என் உள்ளத்தில்
எத்தனையோ எண்ணங்கள் தோன்றிச்சு...
ஐயாயிரம் உரூபா
எத்தனையோ கைகளுக்குள் அகப்படாமல்
தேர்வுத்தாள் திருத்துபவர் கைக்கு
பாதுகாப்பாகப் போய்ச் சேரும் வண்ணம்
தேர்வுத் தாளைக் கட்டிக் கொடுத்த
மாணவரைப் பாராட்டவா...
ஐயாயிரம் உரூபாவைத் தனதாக்காமல்
எல்லோருக்கும் வெளியிட்ட
தேர்வுத்தாள் திருத்துபவரைப் பாராட்டவா...
வானொலியில் செய்தி வாசிக்கையில்
மடலில் என்ன எழுதப்பட்டது என்பதைக்கூட
கேட்க மறந்து சிரித்துக் கொண்டிருந்த
என்னைப் பாராட்டவா...
எல்லோரையும்
ஒருகணம் சிந்திக்க வைத்த
மாணவரின் செயலைப் பாராட்டவா...
பணம் கொடுத்தால் மட்டுமல்ல
மாணவிகளின்
கன்னித் தன்மையையும் வழங்கினால்
சித்தியடையச் செய்வோர் இருப்பதை
கடவுளுக்குத் தெரிவித்த
இச்செய்தியைப் பாராட்டவா...
குறுக்குவழியில் சித்தியடைய முயலும்
மாணவர்களுக்கு
வழிகாட்டுவோரைப் பாராட்டவா...
குறுக்குவழியில் சித்தியடைய
எண்ணும் வண்ணம்
மாணவர்களுக்கு
மூளையைக் கொடுத்த ஆண்டவா
பதில் கூறு என்று கேட்கவா...
இச்செய்தியைக் கேட்ட ஆண்டவனே
ஆடிப்போய் விழுந்தவன் தான்
இன்னும் எழவேயில்லையா...
பணிவாக உங்களிடம்
கேட்பது என்னவென்றால்
ஆண்டவனைத் தட்டி எழுப்பாதீர்
இதைவிட இன்னும் எத்தனையோ
இவ்வுலகில் இடம்பெறுகிறதே
அவற்றை எல்லாம் கேட்டு
ஆண்டவனுக்கு மூச்சுப் போனால்
நாம் எப்படி வாழ்வது?

குறிப்பு: கையூட்டு (இலஞ்சம்) வழங்கும் செயலில் "இப்படியொரு நுட்பமா?" என வானொலிச் செய்தி கேட்டதும் எழுதினேன்.

ஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யாவர்?


பாடலாசிரியர்
பாடகர்
இசையமைப்பாளர்
மூவரது இணைந்த பணி

அன்றைய பாடல்கள் நினைவூட்டக் கூடியதாகவும் படிப்பதற்கு இலகுவாகவும் அழகுத் தமிழிலும் இருந்தன. ஆனால், இன்றைய பாடல்களில் இவற்றைக் காணவில்லையே! அதனால் தான் இன்றைய பாடல்கள் தோற்றுப் போகின்றனவோ!

ஒன்றுமே நடக்காத இரவு

முதலிரவு அன்று முட்டி முட்டியே
கொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க
ஆளாள் களையாது காலம் கரைய
விடிந்த பின்னரே தெரிய வந்தது
"எதுவும் நிகழாத முதலிரவு!"

Wednesday 23 July 2014

கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

குறிப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் உயர் புள்ளி வழங்கவும் சித்தியடைய வைக்கவும் என மாணவிகளின் கற்பைக் கூலியாகக் கேட்பதாகச் செய்தி அறிந்ததும் எழுதியது.

Tuesday 22 July 2014

களவும் கற்று மற

வகுப்பில நடந்த ஆசிரியர், மாணவர் நாடகம்.

ஆசிரியர் : "களவும் கற்று மற" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : அப்படி என்றால் பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவானே... வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 02 : மாற்றார் உள்ளத்தைக் களவெடுத்து, தன் உள்ளத்தில் பேணி மகிழ்ந்தாலும் கலியாணம் செய்த பிறகு மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : சரி, கலியாணம் செய்த பிறகு மனைவியினதோ அல்லது கணவனதோ உள்ளத்தை மறக்காமல் இருந்தால் சரி!

மாணவர் - 02 : ஐயா! நேற்றுத் தந்த வீட்டுவேலை செய்ய மறந்திட்டேன்!

ஆசிரியர் : வீட்டுவேலை செய்யாதோர் வகுப்பில் இருந்து செய்து முடித்துத் தந்த பின் வீட்டுக்குப் போகலாம்.

இப்பவெல்லாம் மாணவர்கள் இவ்வாறான ஒறுப்பை (தண்டனையை) ஏற்றுக்கொள்கிறாங்களா? எனக்கோ ஐயம் தான்!

எதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது?

ஆளுக்காள் ஒவ்வொரு வழியில் நற்பெயரைப் பெறுகிறார்கள். நாம் பெற்ற நற்பெயரே, மக்கள் முன் எம்மை அடையாளப் படுத்தும்.

பண பலம்
அறிவுப் பலம்
சிறந்த பணி செய்தமை
ஒன்றும் நிலைக்காது

சுற்றுச் சூழலில் நம்மாளுகள் எப்படி நற்பெயரைப் பேணுகிறார்களோ, அதனைக் கண்டு பிடித்து முடிவு எடுக்கலாம்.

Monday 21 July 2014

ஒரு சொல்லில் தான்...

உறவுகளுக்குள்ளே
எத்தனையோ மாற்றங்கள்
நிகழவைக்க
ஒரு சொல் போதுமே!
ஒரு சொல்லில் தான்
உறவுகளே முறிகின்றன...
முறிந்த உறவுகளை இணைக்க
எத்தனையோ சொல் இருந்தும்
பயனில்லையே!
சுடுசொல் வெளிப்பட்டதும்
தேடிப்போய்
உறவைத் தானே முறிக்கிறது...
பொய்ச்சொல் வெளிப்பட்டதும்
கண்முன்னே
மெய்யான காதலையும் பிரிக்கிறதே...
பிழைச்சொல் வெளிப்பட்டதும்
மொழி புரியாமல்
பகையைத் தூண்டி விடுகிறதே...
நம்பாச்சொல் வெளிப்பட்டதும்
எங்களை
மக்களும் ஒதுக்கிவிட முடிகிறதே...
நாக்கும் மேல் வாயும்
மூக்கை முட்டுமாப் போல
மோதி வெளிப்படுத்தும்
சொல்லின் வலிமை
எழுத்தில் எழுத முடியாததே!
ஒரு சொல் தானே
உயிரிழப்பை ஏற்படுத்தவோ...
உறவுகளை முறிக்கவோ...
துணை போகின்றதே!
நரம்பு இல்லாத நாக்கால
நறுக்கென்று சொன்ன
ஒரு சொல் போதுமே
உன்னை அடக்க...
மறந்துவிடாதே
சட்டெனச் சொல்லாத
சொல்லில் தான் - நீயும்
தலை நிமிர்ந்து நடை போடுகிறாயே!
சொல்லாமலும் இருக்கேலாது
சொல்லித் தான் ஆகணும் என்றால்
மணித்துளி நேரம்
பின்விளைவை எண்ணிப் பாருங்களேன்
பின் விரும்பியதைச் சொல்லுங்களேன்!

Sunday 20 July 2014

யாரைத் தான் நம்புவதோ...

நடு வழியில்
பள்ளித் தோழியும்
பள்ளித் தோழனும்
சந்தித்தே
உள்ளத்துக் கிடக்கைகளை
கொட்டித் தீர்க்க
ஆங்கொரு அரச மர நிழலில்
ஐந்து முகப் பிள்ளையார்...
காதல் என்று கைகுலுக்கிய
பெண்கள் எல்லோரும்
பணம் பறித்துச் சென்றதால்
ஏழையானதாகக் கூறியே
"யாரைத் தான் நம்புவதோ..." என்றான்
பள்ளித் தோழன்...
அழகன் ஒருவன்
அன்பும் அறிவும் பணமும்
இருப்பதாகக் கூறியே
காதல் பண்ண வந்த பின்னே
உள்ளத்துக்குப் பின்னே உடலையுமே
பறித்துச் சென்றதன் பின்னே
"யாரைத் தான் நம்புவதோ..." என்றாள்
பள்ளித் தோழி...
அரச மர நிழலில்
பிள்ளையார் முன்னே
இருக்கவேண்டியதை இழந்த ஆணும்
இழக்கக்கூடாததை இழந்திட்ட பெண்ணும்
கண்ணீர் விட்டுக் கதை கதையளந்தாலும்
ஒருவரை ஒருவர் புரிந்ததால்
ஒருவரை ஒருவர் ஏற்க முடிந்ததாமே!
"யாரைத் தான் நம்புவதோ..." என்று
பி.சுசிலா பாடிய குரலில்
பாடிச் சுற்றும் இளசுகளே
பேண வேண்டியதை
பேணத் தவறினால் பாருங்கோ
பட்ட பின்னே கெட்ட பின்னே
அரசடிப் பிள்ளையார் உதவுவாரென
அழுதும் பயன் கிட்டாதே!

Friday 18 July 2014

பணமா? அன்பா(பாசமா)?

பணமிருக்கும் வரை
இருந்த உறவு
பணமில்லையென்றால்
பறந்து போய்விடுமே!
அன்பு(பாசம்) காட்டினால்
உறவு மலரும்...
மலர்ந்த உறவு
வற்றாத அன்பால்(பாசத்தால்)
பிரிந்திட வாய்ப்பில்லையே!
வாழ்க்கையில்
பணத்தைவிட
அன்பே(பாசமே) வலிமையானது!
வாழப் பணம் வேண்டும்
ஆனால்
வாழ்வைச் சுவைக்க
இனிய அன்பு(பாசம்) வேண்டுமே!

Thursday 17 July 2014

வயிறு பற்றி எரியுதையா...

அரசுக்கு வருவாய் இன்மையால்
எடுத்த எடுப்பிலே
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டி
வருவாயைப் பெருக்கக் கணக்குப் போட்டிருக்கே!
என் பால்குடிப் பிள்ளை அழும்போது
மனைவி கேட்கிறாள்
"பிள்ளையைப் பெற முயன்றால் சரியே
பிள்ளைக்குப் பால்மா வேண்டி வா" என்று
பச்சையாகக் கேட்கையிலே
என்
வயிறு பற்றி எரியுதையா
எடுக்கிற சம்பளம் போதாமையாலே!
அட கணக்குப்பிள்ளோய்...
நாங்களும் மக்கள் தானுங்க...
அரசுக்குப் பசிக்குது என்றால்
வருவாயைப் கூட்டுறாங்களே...
எங்கட பசிக்குச் சாப்பிட
எங்கட சம்பள அதிகரிப்பை
அரசு போட்ட கணக்கில
சேர்க்காமல் விட்டால்
எங்கட வயிற்றை
எப்படி வளர்க்கிறதப்பா?
பிச்சைக்காரர் கூட
"அரசு
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டுது
நீங்க மட்டும்
தேய்ந்த பழங் காசு பத்துப் போட்டால்
எப்படீங்க
நாங்க பால் கோப்பி குடிப்போம்?" என்று
எங்களுக்குத் தொல்லை தாறாங்களே!

Wednesday 16 July 2014

இரு பொருளில் ஒரு சொல்

அன்று பள்ளியில் படித்தவங்க கண்டாங்க
கணக்கில பிழை வேண்டினேன்
இன்று வீட்டிற்கு வந்தால் பார்க்கலாம்
இல்லாளோடு பிழைத்துக் கொள்கிறேன்
"முன்னேற்றம்!"

*இங்கு வரும் பிழை; சரியற்றதையும் வாழ்தலையும் சுட்டி நிற்கிறது.

பெறுமதி இல்லாத சட்டங்கள்


சட்டம் ஓட்டையாக இருந்தென்ன
சட்டம் வலையாக இருந்தென்ன
சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல்
குற்றவாளிகள் தப்பிக்கொள்ள
இடமளிப்பவர்கள் இருக்கும் வரை
சட்டம் என்பது
பெறுமதி இழந்த ஒன்றே!
மக்கள் குழாம் அணிதிரண்டே
குற்றவாளிகள் தப்பிக்கொள்ள
இடமளிப்போரை ஒழிக்காதவரை
எத்தனை சட்டங்கள் போட்டென்ன
அத்தனை சட்டத்துக்குமே
பெறுமதி கிட்ட வாய்ப்பில்லையே!

Tuesday 15 July 2014

எம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்

பிறந்தால் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் பிறந்தால்
திரைப்பட நடிகராக வேண்டும்...
திரைப்பட நடிகரானால்
சிவாஜிகணேசனைப் போல
நடிக்க வேண்டும்;
எம்.ஜி.இராமச்சந்திரைனப் போல
ஏழை மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்!
திரைப்பட நடிகரான பின்னே
நடிப்பை மட்டும் நம்பினாலும்
ஏழைகளின் தோழனான
எம்.ஜி.இராமச்சந்திரைனப் போல
தமிழ்நாட்டு முதலமைச்சராக வேண்டும்!
எம்.ஜி.இராமச்சந்திரனால் முடிந்தது
என்னால் முடியுமா என்று
என்னை
நானே மதிப்பீடு செய்து பார்த்தேன்...
கடவுளிடம் இறக்கை வேண்டி
பறந்து போனாலும் கூட
முதலமைச்சர் இருக்கையைத் தானும்
எட்டி பார்க்க முடியாத
உனக்கெல்லாம்
எம்.ஜி.ஆரைப் போல வர
எண்ணம் இருந்தும் பயனில்லையென
கண்டி ஆச்சி சொன்னாள்!
நெஞ்சு முட்டத் துயரம்
எனக்குள்ளே முட்டி மோதியது...
திரைப்படத்தில் நடித்தாலும் கூட
மக்கள் முன்னே நடிக்காமல்
மக்களுக்குள்ளே மக்களாக வாழ்ந்தமையால்
எம்.ஜி.ஆர். முதலமைச்சரானாரெனப் படித்தேன்!
இப்பவெல்லாம்
இரண்டு, மூன்று படங்கள்
நடிச்சாப் போதும் கட்சியே தொடங்கிறாங்க...
முதலமைச்சராகத் தானே நடிக்கவும் வாறாங்க...
நான் படிச்சதிலே
சித்திடைய வாய்ப்புண்டா என
எண்ணிப் பார்த்தேன்...
மக்களுக்குள்ளே நடிக்காமல்
திரைப்படத்தில் நடித்தாலும்
கோடிக்கணக்கில வேண்டிச் சேர்த்தாலும்
தனக்கு மிஞ்சிய எல்லாவற்றையுமே
ஏழைகளுக்குக் கொடுத்து உதவினால் போதும்
எம்.ஜி.ஆரைப் போல முதலமைச்சர் ஆகலாமென
வடலூர் அண்ணன்
அடிச்சுச் சொன்ன பிறகு - என்னால
அமைதியாக இருக்க முடியேல்லையே!
என் நெஞ்சில் இருக்கும் இறைவா!
எனக்கு இன்னொரு பிறப்பு உண்டெனில்
தமிழ்நாட்டிலேயே
என்னைப் பிறக்க வைத்துவிடு
எம்.ஜி.ஆரைப் போல
நானும் முதலமைச்சராகத் தானே!

குறிப்பு: எம்.ஜி.ஆரைப் போல பணி செய்யாமல், அவரைப் போல முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

Monday 14 July 2014

இருவரிடம் ஒரே கேள்வி!


1
பெண் : நான் உன்னை விரும்பலாமா?
(காதலிக்கலாமா என்கிறேன்)

ஆண் : அம்மா தாயே...
இப்படித்தான்
பலர் என்னோடு பழகினாங்க...
நானும்
இளகினதால இழந்தேனே
பல இலட்சம்...

2
ஆண் : நான் உன்னை விரும்பலாமா?
(காதலிக்கலாமா என்கிறேன்)

பெண் : ஐயா கடவுளே...
இப்படித்தான்
ஒருவர் என்னோடு பழகினாரு...
நானும் இளகினதால,
இழக்கக்கூடாததை இழந்திட்டேனே...

Sunday 13 July 2014

மிளகு (கடுகுக் கதை)

நம்ம ஊரில பொன்னையரும் பொன்னம்மாவும் தான் பழசுகள். பொன்னையருக்குத் தொன்னூற்றொன்பது அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் முப்பத்தைந்து அகவைக் காளை தான். பொன்னம்மாவுக்கு தொன்னூற்றிரண்டு அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் இருபத்தைந்து அகவைக் வாலை தான். இருவரது இளமைக்கும் பனம் பண்டங்கள் தான் காரணமென ஊரார் சொல்லிக்கொள்வர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, பொன்னையருக்குப் பொழுது போகவில்லை. "எடியே பொன்னி, அந்தப் பனம் பாத்தியைக் கிளறட்டோ..." என பொன்னையரும் இல்லாளைக் கேட்டார். "இந்தச் சனியன் இஞ்ச நின்றால் தொல்லை" என்று "ஓமோம் போய்க் கிண்டுங்கோ" என்று பொன்னம்மாவும் பொன்னையரைக் கலைத்தாள்.

பொன்னையரைக் கலைத்த பொன்னம்மா அடுப்பில என்ன பண்ணுறாள். பொன்னையருக்கு அதை அறிய வேணும் போலிருந்தது. இஞ்சாரும் பொன்னம்மா... எனக்குக் கொஞ்சம் பாலைத் தண்ணியைத் தாவேன். பொன்னையரும் பொன்னம்மாவுக்கு தொல்லை கொடுத்தார்.

இஞ்சாரும்... இந்தப் பச்சைத் தண்ணியைக் குடியுங்கோ... பொன்னம்மா மூக்குப்பேணியை நீட்டினாள். "எடியே... நான் கேட்டது பால்த் தண்ணியெல்லோ... ஏனடி பச்சைத் தண்ணியை நீட்டுறாய்..." என்று பொன்னையரும் பொங்கினார்.

தண்ணியைத் தாவென்று கத்திப்போட்டுப் பாலைக் கேட்கிறியே!

பாலைத் தண்ணியைத் தாவென்றெல்லோ கேட்டேன்!

எனக்குத் தண்ணி தான் காதில விழுந்தது!

அடுப்பில என்னடி வேலை? பாலை ஊற்றிக் கொண்டு வா!

"இந்தச் சனியனோட காலம் தள்ள ஏலாதெனக் குமுறிக்கொண்டு, அடுப்பில உழுத்தங் கழி கிண்ட போறேன்; அதற்குள்ளே பாலை ஊற்றெண்டு தொல்லை தாறியள்..." என்று அடுத்த அடுப்பில கிடந்த பாலை ஊற்றிக் கொடுத்தாள் பொன்னம்மா.

உழுத்தங் கழி கிண்டித் தாறவளிட்ட தேவையில்லாமல் தொல்லை கொடுத்திட்டேனென உழுத்தங் கழிச் சுவை நாவூறப் பாலைக் குடிச்சதும் பனங் கிழங்கு கிண்டப் பறந்தார் பொன்னையர்.

எப்படித் தான் எரிந்து விழுந்தாலும் பொன்னம்மாவுக்குப் பொன்னையரில அதிக பற்றுத் தான். பனங் கிழங்கு கிண்டிக் களைத்துப் போவாரென எண்ணி "உழுத்தங் கழி ஆறப் போவுது, எப்பன் சுறுக்காய் வாவென்" என்று கூப்பிட்டாள்.

உழுத்தங் கழிச் சுவையில அப்படியே கிண்டிய கிழங்கை அள்ளிக்கொண்டு பொன்னையரும் திரும்பினார். கிழங்கை உரித்துப் போட்டு அவிச்சுப் போடெனச் சொல்லிப் போட்டு உழுத்தங் கழி உண்ட களைப்பில எப்பன் சரிந்தார் (படுத்தார்).

கிடந்தவர் எழும்பினால் சுள்ளெண்டு கொதிப்பரெனப் பொன்னம்மாவும் கிழங்கை அவிச்சுப் போட்டு ஆறியிருந்தாள். ஒருவாறு பொன்னையரும் எழும்ப அவிச்ச கிழங்கை நீட்டினாள். பொன்னையருக்கு எப்பன் மகிழ்ச்சி! "உப்பு மிளகைப் பொடி பண்ணியாவேன்" என்று அன்பாச் சொன்னார்.

பொன்னம்மா அடுப்புப் பக்கமாய்க் கிடந்த நாலு செத்தமிளகாய் இரண்டு உப்புக் கட்டி எடுத்து உரலில போட்டு இடிச்சுக் கொடுத்தாள். சம்பல் தூளாகக் கிடந்த மிளகாய்ப் பொடியை நீட்டினாள்.

என்னடி... கறுப்புப் பொடிக்குப் பதிலாகச் சிவப்புப் பொடியை நீட்டுறாய்... என்னடி பண்ணினாய் என்றார் பொன்னையர். உப்பு மிளகாய்ப் பொடி கேட்டியள்! அதைத் தான் செய்தேன்! அது தான் சிவப்பு!" என்று பொன்னம்மா சொல்ல, "அதடி... உப்பும் மிளகும் எடி... போய்ப் பொடி பண்ணியாடி..." என்று பொன்னையர் விரட்ட "உப்பு மிளகுப் பொடி" உடன் அவர் முன்னே பொன்னம்மா வந்து நின்றாள்.

ஒரு பனங்கிழங்கை எடுத்தார்... இரு பாதி ஆக்கினார்... தும்பைத் தவத்திக் கிழங்கை உப்பு மிளகுப் பொடியில் வைத்துத் தொட்டுத் தின்றார் பொன்னையர். இஞ்சாரும் நீங்களும் தின்று பாரும்... உப்பு மிளகுப் பொடியில தொட்டுத் தின்னேக்க பனம் கிழங்கு நல்ல சுவையாக இருக்குதே!

விடிகாலை ஐந்துக்கு எழும்பினதும் பத்து மணிவரை படுத்தாத பாட்டைப் படுத்திப் போட்டு, பனங்கிழங்கைத் தின்னென்று அன்பாக உருகிறியள் எனப் பொன்னம்மா சீறினாள். "குடும்பம் என்றால் முற்றும் அன்பையோ முற்றும் மோதலையோ எதிர்பார்க்க முடியாதே... எங்கட வாழ்வில இதெல்லாம் வழமை தானே" என்று பொன்னையர் பொன்னம்மாவை அமைதிப்படுத்தினார்!
(யாவும் கற்பனை)


இது போன்று நீங்களும் கதைகள் புனையலாம். அதற்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பயன்பெறுக.
கதைகள் புனையலாம் வாருங்கள்!
http://wp.me/pTOfc-aP

Saturday 12 July 2014

பேரூந்து போய் விட்டதா?

தோழர்-01: என்ன காணும்! வருகை பிந்திப் போய் விட்டதே!

தோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது! (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்!

கோவில் உள்ளே என்ன மோதல்?

ஒருவர்: என்ன காணும் ஆளுக்காள் முட்டி மோதுறாங்கோ...?

இருளர்: அந்தக் கடவுளின் உருவிற்குக் கீழே மாங்காடு பூஞ்சோலை அம்பன் என்றிருக்கே... அதற்குக் கீழே அன்பளிப்பு அம்பிகை என்று போடாமையால் அடிபடுறாங்கோ...!

சும்மா அலைய ஏலுமே!

பாலையா: என்னவாம் உவன் வாரிக்குட்டி நான்காமாளுக்குப் பின்னாலே அலையிறான்...

தேனையா: ஏற்கனவே மூன்றாளோட ஓடிப்பிடிச்சு முப்பது இலட்சம் வேண்டின சுவையில; பத்து இலட்சம் வேண்டத் தான்...

Thursday 10 July 2014

உறவுகள்



ஓடும் பழமும் (புளியம்பழம்)
ஒட்டிக் கொள்ளாதது போல
உலாவும் உறவுகளை விட
தோலும் தசையும் (மனிதவுடல்)
ஒட்டிக் கொண்டது போல
உலாவும் உறவுகள் நன்று!
தமது கோட்டுக்குள்ளே
அடக்கி ஆள எண்ணுவோரை விட
ஆண்டி ஆனாலும்
அரசனை நம்பியவர் போல
நாம் கீறிய
கோட்டைத் தாண்டாதவர் மேல்!
எப்படி இருப்பினும்
எப்படியும் எப்போதும் எது வரினும்
ஒருவருக்கொருவர்
தமது விருப்பு, வெறுப்புகளை ஏற்று
சமநிலை உணர்வோடு உலாவும்
உறவு நிலையே உயர்வானது!

பத்திரிகைச் செய்திகளே!

இளமை
பூத்துக் குலுங்கும் அகவையிலே
பாலியல் உணர்வலைகள்
மோதிக்கொள்ளும் வேளையிலே
நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை)
தாமாக ஓடிப் போய்க் கூடியோ
தாமாகக் கூடிப் பின் ஓடியோ
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
சேமிப்புப் பற்றிச் சிந்திக்காமையால்
சீரழிந்து போகின்றனரே!
சோறு, கறி ஆக்கி விட
தேடவேண்டியது எத்தனையோ
அத்தனையும் இருந்தால் தானே
சமையல், சாப்பாடு போல
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
குடும்பம் நடாத்தத் தேவையானதை
தேடிக் கொள்ளாமல் இறங்கினால்
தெருவில் இறங்கி
பிச்சை எடுக்க வேண்டி வருமென
இளம் அகவைக் குஞ்சுகள்
அறிந்திருக்க வேண்டுமே!
அறிந்திருக்கத் தானே - அந்த
பாலியல் சுகம் தேடப் போய் - அதை
மறந்து விடவே...
வயிற்றை நிரப்பிய பெண்குட்டி
வயிற்றில் உள்ளதை அழிக்க
மருத்துவரை நாடவே
பெண் வயிற்றை நிரப்பிய
ஆண்குட்டியைத் தேடி
காவற்றுறை வலைவீச்சென
நாளும் நிரம்பி வழியும்
பத்திரிகைச் செய்திகளே!

Monday 7 July 2014

நண்பா... நண்பா...

தேர்வு எழுதிய பள்ளித் தோழிகள் பேசிக் கொண்ட பேச்சுகளைப் பாருங்கள்.

தோழி-1 : தேர்வு திறம்பட எழுதினாயா?

தோழி-2 : சக்தி குறிப்பெடுத்த தாளைக் களவாடி எழுதியாச்சு...

தோழி-1 : உன்ர எதிர்காலம் போச்சடி...

தோழி-2 : சக்தி தானே வகுப்பில முதலாம் பிள்ளை!

தோழி-1 : ஆமாம். அவள் மேற்பார்வையாளர் கண்டுபிடிக்காமல் தலைகீழாய்க் குறித்ததை அப்படியே எழுதிட்டியேடி!

தோழி-2 : அவள் அதிலையும் கெட்டிக்காரியடி! நான் எதிலையும் முட்டாளடி...

தோழி-3 : இனியாவது படித்துப் போட்டுத் தேர்வு எழுத வாடி!

தோழி-4 : எவளாச்சும் குறிப்பெடுத்தைப் படியெடுத்து எழுதவும் படிக்க வேணுமடி...

எறும்பூரக் கல் தேயுமாப் போல...

ஏதோ
என் எதிரி
என்னைத் தூற்றிக்கொண்டே இருந்தார்...
ஏன்டா
என்றும் தொடருகின்றாய் என்று கேட்க
எறும்பூரக் கல் தேயுமாப் போல
தன்பக்க விளக்கமெல்லாம்
மக்கள் உள்ளத்தில் எழுதப்படுமாமே!
எதிரியின்
தூற்றல் எல்லாம் பொய்யென
நான் கூட
வெளிப்படுத்திய
என்பக்க விளக்கமெல்லாம்
மக்கள் உள்ளத்தில் எழுதப்படாதா?!
கோட்பாடுகளும் முதுமொழிகளும்
எந்தவொரு பக்கத்தாருக்கும்
துணை நிற்பதில்லையே - அவை
எல்லோருக்கும் பொதுவானதே!

Saturday 5 July 2014

இப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்?

கே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின் வெளியே வந்த போது கவுண்டமணி, செந்திலைக் கண்டேன்.

செந்தில்: அண்ணே! எனக்கொரு ஐயம் அண்ணே!

கவுண்டமணி: அப்படி என்னடா ஐயம்!

செந்தில்: தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமாமே! அதெப்படி அண்ணே!

கவுண்டமணி: அதுவா... இங்கால கொஞ்சம் வாடா... சொல்லுறேன்!

செந்தில்: இங்கால நின்றால் உங்களால முடியாதோ?

கவுண்டமணி: இல்லை! இங்கால வந்தால் தானடா முடியுமடா...

கவுண்டமணிக்குக் கிட்டச் செந்தில் நெருங்கினார். கவுண்டமணியோ ஓர் உதை விட, செந்தில் பிடரி அடிபட விழுந்தார்.

செந்தில்: கிட்ட வைச்சு உதைக்கலாமோ அண்ணே!

கவுண்டமணி: இப்ப உங்களுக்குத் தலையிடி எப்படி?

செந்தில்: உங்கட உதையால வந்த தலையிடி அண்ணே!

கவுண்டமணி: உதைத்தான் சொல்லுறது; தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்று!

செந்தில்: போங்க அண்ணே! உதை உதையில்லாமல் சொல்லேலாதோ!

கவுண்டமணி: உதை தானே உதை உனக்கு உணர்த்திச்சு!

இதையெல்லாம் கண்டு களித்த பின், நான் அவ்விடத்தை விட்டு அகன்று நன்னூல்.கொம் செயலகத்திற்குச் செல்ல அம்பாள் நகரிற்குப் புறப்பட்டேன்.


தீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன?


1.தீமை செய்தோரை ஒழித்த நாள்.

2.நன்மை செய்தோரை நினைவூட்டும் நாள்.

3.ஒழுக்கமுடையோரைப் போற்றும் நாள்.

4.இம்மூன்று கருத்தும் பிழையானது
(அப்படியாயின் உங்கள் கருத்தைக் கீழே தரவும்).

5.வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வைப் பகிரும் நாள்.

6.எல்லா மதத்தவரும் கொண்டாடும் ஒவ்வொரு பெருநாளுக்குப் பின்னாலேயும் நல்ல வழிகாட்டல் ஒன்று மறைந்திருக்குமே!

Thursday 3 July 2014

பெண்ணு பிடிக்க


பையனுக்குப் பெண்ணு பிடிக்கலையாமோ
பையனுக்குப் பிடித்த வீடும் காரும்
நெல்லுக் காணியும் இலட்சங்கள் பலவும்
மல்லுக்கட்டாமல் முன்வைத்துப் பாரும்
"பெண்ணு பிடிச்சிருக்கு என்பான்!"

மருத்துவமனையில்...

மருத்துவர்கள் எல்லோரும்
வருவாயில் குறியாய் இருக்காங்கோ...
நோயாளிகள் எல்லோரும்
மருத்துவரில் குறியாய் இருக்காங்கோ...
"நோய் குணமாகுமா?"

Tuesday 1 July 2014

நல்ல கணக்கு

அந்தி சாயும் நேரம் நம்மவர் நாட்டுநடப்புக் கூடிக் கதைக்குமிடத்தில் இப்படியொரு நாடகம் ஆடினாங்க.

முதலாம் ஆள் : காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்?

இரண்டாம் ஆள் : இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்...

மூன்றாம் ஆள் : அதுக்குத் தானண்ணே! காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே!

நான்காம் ஆள் : எனக்கு ஏறிட்டுது அண்ணே!

மூன்றாம் ஆள் : எப்படி ஏறிட்டுது?

நான்காம் ஆள் : வைப்பகத்தில (வங்கியில்) நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் (சீரியல்) பார்த்த மனைவியின் சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தோமல்லோ!

முதலாம் ஆள் : அப்படி என்ன தான் படித்தீர்கள்?

நான்காம் ஆள் : நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் பார்க்கக் கூடாது என்று தானண்ணே!

இரண்டாம் ஆள் : சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தென்ன பயன்!

முதலாம் ஆள் : வள்ளுவரின் வழிகாட்டலைப் படியுங்க...

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

(பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகை
குறள்:467)

திரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு...?

1. இசை கூடுவதால் பாடல் இசைக்குள் மூழ்கிறது.
2. பாடகர்கள் சொற்களை விழுங்குவதால் பாடல் தெளிவில்லை.
3. இசையமைப்பாளரும் தமிழ் உச்சரிக்கத் தெரியாத பாடகர்களும் பாடல்களைச் சாகடிக்கிறார்கள்.
4. பாடலாசிரியர்கள் தூய தமிழில் பாடல் புனைவதில்லை.
5. ஆங்கிலப் பாடல்களை ஒட்டியும் ஆட்டத்தை நம்பியும் பாடல்கள் அமைவதால் நன்றாக அமைவதில்லை.
6.சிறந்த உச்சரிப்பு, பாடலை முதன்மைப்படுத்தும் இசை என்பன இன்றைய திரைப்படப் பாடல்களில் காணமுடிவதில்லை. இது தமிழ் பாடல்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும்.

சிலையில் எழுத்து

ஒருவர் : "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பாங்களே!

மற்றவர் : எந்தச் சிலையிலயங்கோ...