(படம்: வளரும் கவிதை தளத்தில் இருந்து)
"தண்ணீர்ப் பஞ்சம் காரணமாகவே நான்காம் உலகப்போர் வரலாம்." எனத் தொடரும் அவரது பதிவில் "முடிந்தால் பகிருங்கள். அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்." என வழிகாட்டுகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் வழிகாட்டலின் படி நானும் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் வெளிவர உந்துசக்தியான அறிஞர் யாழ். மதிசுதா அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுகிறேன். இவ்வாறான விழிப்புணர்வுப் படங்களை நான் என்றும் வரவேற்கிறேன்.
உலகம் வெப்பமடைதல், வானில் ஓசோன் ஓட்டை எனப் பல காரணங்களை நீட்டி உலகெங்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு வரலாம் என அறிஞர்கள் ஆளுக்காள் பதிவுகளைப் பதிவார்கள் என நம்புகின்றேன். ஆயினும், "யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு" என்ற தலைப்பில் நான் சொல்ல வரும் செய்தி வேறு.
பத்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இருந்து மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அக்காலப் பகுதியில் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்களின்) கழிவு எண்ணெய்களை (கழிவொயில்களை) நிலத்திற்குக் கீழே கருவிகளின் பின்னூட்டத்துடன் செலுத்திக்கொண்டு வந்தனர்.
அதன் தாக்கம் தற்போது நிலத்திற்குக் கீழே நன்நீர்ப் படையுடன் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்துவிட்டது. அதனால், யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதிக்கு அண்மையாக உள்ள நன்நீர் ஊற்றுக் கிணறுகளில் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்த நீரே வெளிவருகிறது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் வேளாண்மைச் செய்கையைத் தொடர முடியாமையும் ஏற்படுகிறது.
இந்நிலை ஏற்படக் காரணம் அறிஞர்கள் தூக்கத்தில் இருந்தமையே! அதென்ன தூக்கம்? அதுதான் நிலத்திற்குக் கீழே செலுத்தியதை நடுக்கடலில் கலக்கவிட்டிருக்கலாம் என மாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இனியென்ன செய்யலாம்? காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?
இதற்கும் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்திற்கும் என்ன உறவு? யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு வலுப்பெற்றால் என்ன நிகழும்? ஒன்றரை மணித்துளியில் உறைப்பாகக் காட்சிப்படுத்திச் சொல்ல வந்த செய்தி என்ன? இவற்றிற்கு விடைகாணக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்தைப் பாருங்கள்! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்நீரைப் பேணுவோம் நம்மவர் வாழ்வை வளப்படுத்துவோம்.



