Saturday 31 August 2013

சான்றுகள்

நம்மாளுகள்
வாழ்கையின் கண்ணாடி!
நம் கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
எமது காலம்
வரலாற்றுக் கண்ணாடி!
எந்த ஆண்டவனே வந்தாலும்
இந்த உண்மையை மாற்ற இயலாது!
பொய்கள்
காற்றிலே பறந்தாலும்
காற்றைக் கிழித்துக் கொண்டு
நாங்களே
உண்மைகளை நாடுகிறோம்!
ஆமாம், உண்மைகள்
அவ்வளவு கனமானவை!
வாழ்கையின் சான்றாக
"தாய்மையே வாய்மை" என்று
ஒரு வரிப்பாவில் கூறுவது பொய்யா?
ஓ! மனிதா!
ஒதுங்கித் தனித்து நின்று
ஒழிந்து - நீ
எதைச் செய்தாலும்
எப்போதும் ஊரறியச் சான்றுகள்
எண்ணிலடங்காமல் இருக்கே!

எதற்கு எதை மாற்றுவது?


தந்தையோ தன்னைப் போல
மருத்துவராக வாவென்று...
தாயோ தன்னைப் போல
பொறியியலாளராக வாவென்று...
பிள்ளையோ தனக்கு இலகுவானது
மருத்துவமும் பொறியியலும் கலந்த
உயிரித் தொழில்நுட்பம் தானென்று...
முக்கோண உச்சிகளாக
மூவரும் முரண்டு பிடிக்கையில்
எவரது உள்ளத்தில் எதை மாற்றுவது?
உலகெங்கும்
அறிவியல் வானைத் தொட
ஊரெங்கும்
மெய்யறிவு முகட்டைத் தொட
வீட்டில் பிள்ளைகள்
திரைப்பட நடிகர்கள் காட்டும் வழியில
தாங்களே பயணப்பட
எவர் போக்கில் எதை மாற்றுவது?
பெற்றவர்கள் தங்கட போக்கில
பிள்ளைகள் தங்கட போக்கில
ஊடகங்கள் தங்கட போக்கில
பள்ளிகளின் ஒழுக்கம் கிடப்பில
ஆசிரியர்கள் தங்கட நடப்பில
சிறார்கள் தாம் விரும்பிய வழியில
ஊரோ உருப்பட முடியல
நாடோ பின்னோக்கிய நடையில
நாட்டு வளம் குறுகும் நிலையில
மக்கள் வளம் தேயும் நேரத்தில
எல்லாம் அரசுப் பதவிகளில
உள்ளவர் கைகளில உருளுவதால
நாமும் ஊரும் நாடும் முன்னேற
எங்கே எதை மாற்றுவது?
நாட்டுக்கு நாடு போரோய
நாடுகளுக்கு உள்ளே போர் வெடிக்க
போராலே துண்டுகளாக நாடுகள் உடைய
நெடுநாள் ஆட்சிக்காரர் இறங்கியோட
உயிரிழப்பும் போர் முரசும் ஓயாத
எங்கட உலகில் அமைதியைப் பேண
எப்படி எதை மாற்றுவது?
வீட்டுக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகிற்கு
எங்கும் எதிலும் எப்போதும்
ஒரே கோட்பாடு நடைமுறைக்கு வர
எல்லாம் மாறும் என்றாலும்
எதற்கு எதை மாற்றுவது?

தற்கொடைச் சாவுக்கு மாற்றுவழி தேடுவோம்


உலகையே அழவைத்த
நேற்றைய
முத்துக்குமாருவைப் போல
இன்றைய
பொறியியலாளர் கிருஸ்ணமூர்த்தியும்
உலகின் முகத்தைத் திருப்ப
கண்ணீர் கதை எழுதிவிட்டார்!
"இளைஞர்களே போராடுங்கள்.
ஆனால், தயவு செய்து
உங்களின் உயிர்களை
ஈகம் (தியாகம்) செய்ய வேண்டமென
ஈழத்து யாழ் தினக்குரலில்
வைகோ கூறியிருப்பதாகப் படித்தேன்!
தன்னை ஒறுத்துச் சாவடைதலால்
உண்மையை உணர்த்தலாம்...
ஆனால்,
வெளிப்பட்ட உண்மையால் கிடைத்த
விளைச்சலைப் பயன்படுத்த
தமிழர் இல்லையெனில்
எவருக்கு நன்மை?
போராட வேண்டமென
உங்களைத் தடுக்க
எனக்கோ எள்ளளவும் உரிமையில்லை...
எப்படியிருப்பினும்
தற்கொடைச் சாவை நிறுத்தி
மாற்று வழிகளில் போராடுவதையே
பலரும் விரும்புகின்றனர்!
ஒரு தமிழன் அல்லது ஒரு தமிழிச்சி
இவ்வுலகில் வாழும் வரை
முத்துக்குமாரு, கிருஸ்ணமூர்த்தி போன்ற
தொப்புள் கொடி உறவுகள்
எல்லோரையும்
நினைவூட்டிய வண்ணமே வாழ்வர்!

எதிர்த்தான் வீழ்ந்தான்

நீண்ட நாள் எதிரி
என்னை
பிடித்துச் சிறையிலடைக்க வழியின்றி
தன்னைத் தானே அழித்த கதை
உங்களுக்குத் தெரியுமா?
மூளையைப் பாவிக்காத முட்டாள் எதிரி
எனக்கு வேண்டியதை
எவரும் வழங்காமல் செய்தும்
உறவுகளாக எவரையும்
இணைய விடாமல் தடுத்தும்
எதற்கும்
தன் காலில் விழவைத்தால்
பிடித்துச் சிறையிலடைக்கலாமென
எதிர்த்தான் வீழ்ந்தான்!
ஒர் உறவை முறிப்பதனால்
புதிதாய் எந்த உறவும்
முளைப்பதில்லை
புதிதாய் இணைந்த உறவால்
பழைய உறவுகள்
முறிவதைப் பார்க்கிறோம்
எதிரிக்கு எட்டுமா - இந்த
உண்மை!
"ஆயிரம் நண்பர்களை
வைத்துக்கொள்
ஒர் எதிரியை ஏனும்
உருவாக்கி விடாதே" என்றுரைத்த
பாவரசர் கண்ணதாசனின் வழிகாட்டலின் படி
இயன்றவரை
கைக்கெட்டியதைக் கையாண்டதால்
நானோ
எதிரியின் பிடியில் சிக்கவில்லை!

சிவராத்திரிக்குப் பின்னாலே...

இந்துக்கள் கொண்டாடும் சிவராத்திரியின் பின்னாலே பெரிய உண்மையே மறைந்திருக்கிறது. படைத்தல் கடவுளான பிரம்மாவும் காத்தல் கடவுளான விஷ்ணுவும் தான் தான் பெரியவர் என்ற இறுமாப்பும் தலைக்கனமும் இருந்து வந்தது. இந்துக்களின் முழு முதற் கடவுளாகிய சிவன் இதனை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தார்.
சிவன் பூமிக்குக் குறுக்கே ஒளிப் பிளம்பாகத் தோன்றி இதன் அடியையோ முடியையோ முதலில் கண்டுபிடித்து வருபவரே பெரியவர் என அறிவித்தார். அவ்வழியே பிரம்மாவும் விஷ்ணுவும் போட்டியில் இறங்கினர்.
பிரம்மா பறவையாக முடியையும் விஷ்ணு பன்றியாக அடியையும் தேட முயன்றனர். இறுதியில் இருவரும் தோல்வி கண்டனர்.
விஷ்ணு தனது தோல்வியை சிவனிடம் வந்து சொன்னார். வானிலிருந்து விழுந்த தாழம்பூவைக் கொண்டு வந்து சாட்சியாகக் காண்பித்து முடியைக் கண்டுபிடித்தாக பிரம்மா பொய் கூறினார். எல்லாம் அறிந்த சிவனுக்கு உண்மை தெரிந்தமையால் பிரம்மாவின் விளையாட்டைக் கண்டித்தார். இருவரது இறுமாப்பும் தலைக்கனமும் சிவனின் செயலால் அடங்கியது. இச்செயலை நினைவூட்டிச் சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி ஆகும்.
சிவனுக்கு உண்மை கூறிய விஷ்ணுவுக்கு உலகெங்கும் கோவில்கள் உண்டு. சிவனுக்குப் பொய்ச் சாட்சி கூறிய தாழம்பூவை கோவிற் பூசைகளில் சேர்ப்பதுமில்லை... சிவனுக்குப் பொய் கூறிய பிரம்மாவுக்கு எங்கேனும் கோவில்களும் இல்லை. சிவராத்திரிக்குப் பின்னாலே இப்படியொரு வரலாறு மறைந்திருக்கிறது.

குழப்பம்

எலிக் கட்சித் தொண்டர் : என்னங்க நாய்க் கட்சி, அடிக்கடி குலைத்துக் குலைத்து குழப்பம் விளைவிக்கிறாங்க...

பூனைக் கட்சித் தொண்டர் : குழப்பம் விளைவித்து நம்மாளுகள் சாவடைந்தால் தானே, அவங்க ஆட்சியில நிலைக்கலாம்...

நல்ல நாடகம்


(ஞாயிறு விடுமுறை நாளாகையால் ஊர்க்கோழி உரிச்சுக் காய்ச்சித் தின்று முடிய தாய், தந்தை, பிள்ளைகள் வீட்டின் முன் பகுதியில் குளிர்களி வேண்டிக் குடித்த வண்ணம் இருந்தனர்.)
பிள்ளை-01 : அப்பா! ஓர் உதவி செய்வியளே!
தகப்பன் : இப்ப ஏலாது. கோழிக்கறியும் சோறும் செமிக்கப் படுத்து நித்திரை கொள்ளுங்கோ...
பிள்ளை-02 : அம்மா! ஓர் உதவி செய்வியளே!
தாய் : கொப்பர் படுக்கச் சொல்கிறார், பிறகு, எனக்கு ஏன் தொல்லை தாறியள்...
(இரண்டு பிள்ளைகளும் அறைக்குள் நுழைந்து சிறிது நேரத்தின் பின் வெளியே வந்து நின்று...)
இரண்டு பிள்ளைகளும் : அப்போய்! அம்மோய்! நாங்க படம் பார்க்கப் போறோம்...
தகப்பன் : என்ன படமடா?
இரண்டு பிள்ளைகளும் : உதில தான், "கல்லடியான்" படமாளிகையில தான்... "திண்டு வளர்ந்தான்" படந்தான்
தகப்பன் : படத்துக்குக் காசு எங்கால...
இரண்டு பிள்ளைகளும் : உங்கட கால்சட்டைக்குள்ளே கையைவிட்டு எடுத்தோம்...
தாய் : அப்பாடை காசைக் கொடுங்கோ! வாற கிழமை படம் பார்க்கலாம்...
தகப்பன் : சீ! சீ! இப்பவே போவோம்! காசைத் தாங்கோ...
இரண்டு பிள்ளைகளும் : இந்தாருங்கோ... வாங்கோ படத்துக்குப் போவோம்!
தாய் : பிள்ளைகளுக்கு இணங்கிப் போறது நல்லதுக்கில்லை...
தகப்பன் : எங்கட விருப்பத்தைத் திணித்தால், பிள்ளைகள் தங்கட கைவரிசையைக் காட்டத்தான் செய்வினம். பிள்ளைகளோட அணைஞ்சு போறது நல்லது தானே...
(பிள்ளைகள் விருப்பத்தை அறியணும் அவர்களுக்கு ஏற்றாற் போல இசையணும் என்றவாறு எல்லோரையும் படத்துக்குத் தந்தை கூட்டிச் செல்கிறார்.)

ஆளைத் தெரியுமா?

காதலன் : பா(கவிதை)ப் போட்டியென்றதும் திருவிளையாடலில் வரும் தருமி நினைவுக்கு வருகிறதே!

காதலி : எழுதிய பா(கவிதை)வுக்கு விளக்கமளிக்க ஆள் தேடிய தருமி தானே!

(இக்கருத்து எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. தங்கள் உள்ளம் புண்படும் ஆயின் என்னைத் தண்டிக்கவும்)

Wednesday 21 August 2013

கடவுளே நிரம்பப் பிச்சை போடு

ஓடோடி நூறைக் காதலித்தேன்...
தேறியது ஒருத்தி என்றாலும்
எவராவது பிச்சை போட்டால் தான்
என் வீட்டு உலையில
அரிசி வேகுமென்பதை
அறிந்த அவளும் - என்னை
காதலிக்க மறுத்து விட்டாளே!
கடவுளே!
நிரம்பப் பிச்சை போடு
என் குடும்ப நிலை உயரவேணும்
அப்பதான் - வேறு
எவளாயினும் என்னைக் காதலிப்பாளே!

Friday 9 August 2013

சாவா? வாழ்வா? மருத்துவரே கேட்கிறார்!


நம் மண்ணில் - ஏழைகளான
நம்மாளுகளை எண்ண
ஆண்டவனுக்கே
கண்ணில்லாட்டிப் பரவாயில்லை
அறிவு முட்டி முற்றிய - பார்வை
செறிவு மிகுந்த மருத்துவருக்குமா
கண்ணில்லை என்று - ஏழை
கண்ணீர் விட்டதை
நீங்கள் பார்த்தீர்களா?
தாங்க முடியாத நோயால்
அரச மருத்துவ மனைக்கு
விரைந்த நோயாளியைப் பார்த்து
இங்கு வசதி இல்லைப் பாரும்
அங்கு வசதி நிரம்ப - நாளைக்கே
வந்தால் செய்யலாம் சத்திரசிகிச்சை
என்றுரைக்கலாமா
இன்றே சாகத் துடிக்கும் நோயாளியிடம்!
கேட்டுப் பாரும்
நாட்டு மக்கள் நலம் பெற
நோயாளிகளுக்காய் மருத்துவமனைகளையும்
நோய் தீர்க்கும் மருத்துவர்களுக்கான படிப்பையும்
இலவசமாக அரசு வழங்க
பலமாகத் தனி்யார் மருத்துவமனைக்கு
வாவென்று அழைக்கும் மருத்துவரிடம்
ஏனென்று கேட்கத் துணிவற்ற
ஏழையாலே என்ன தான் செய்யமுடியும்?!
ஏழை சாகத் துடிக்கையிலே
கோழை மருத்துவர் கேட்ட பணத்தை
தேடிப் பெற முடியாமையால்
வாடி நின்ற ஏழை
கண்ணீர் விட்டபடி
மண்ணில்
மூச்சடைத்துச் சாவடைந்தார்!

தமிழனுக்கு முடிவோ விடிவோ எப்போது?

ஈழத் தமிழர் நிலைய
கொஞ்சம் பாருங்களேன்...
48 ஆண்டுகளுக்கு மேலாக
விடுதலைக்காகப் போராடியும்
தோல்வியைத் தழுவுவதற்கு இடையில்
உலகெங்கும் 48 நாடுகள்
விடுதலை அடைந்துவிட்டன...
அன்று 48 போராளிக்குழுக்கள்
இன்று 48 அரசியல் குழுக்கள்
தலைமைக்கும் பதவிக்கும் மோதிக்கொள்ள
வசதியுள்ளவர் எல்லோரும்
வெளிநாடுகளுக்குப் பறந்தோட
எஞ்சிய கொஞ்சமும்
ஈழத்தில் சாவது தொடர
ஈழமே சிங்கள நாடாகிறது...
இப்படியே போனால்
ஈழத்தில்
தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லையே!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் போல
பண்டாரவன்னியனுக்கு
ஓர் காக்கைவன்னியன் போல
தலைவர் கரிகாலனுக்கு(வே.பிரபாகரன்)
ஓர் கருணா அம்மான்(வி.முரளீதரன்) போல
எத்தனையோ ஒற்றர்கள் இருப்பதால் தான்
தமிழர் அழிவதே முடிவாயிற்று!
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
தமிழர் உணர்ந்தால்
ஒரே தலைமை ஒரே கோட்பாடென
ஓரணியில் திரண்டால்
தமிழனுக்கு விடிவு கிட்டலாம்!
உலகின் எந்த மூலையிலும்
வாழும் தமிழரே
ஈழத்தில்
தமிழர் அற்றுப் போனாலும்
உங்கள் நாடுகளிலாவது
தமிழர் அழியாமல் பேண
ஓரணியில் இணையுமாறு
2008, 2009 ஈழப் போரில்
பாதிப்புற்றவர் கெஞ்சுகின்றனர்!

நேற்று, இன்று, நாளை

நான் காணும்
நம்மாளுகளின் வாழ்க்கையில்
முன் நிகழ்வு, பக்க விளைவு, பின் விளைவு
எல்லாம் ஏனென்று எண்ணிப்பார்த்தேன்!
நேற்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
இன்று மீள முடியாமல்
துயருறுகிறான்!
நேற்றே
இன்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிகாலை எழுந்ததும்
என்ன செய்வதென்று தெரியாமல் முளிசுகிறான்!
இன்றே
நாளையை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிய விடிய
நன்றே முன்னேறினாலும்
முழுமையான மகிழ்வைத் தேடுகிறான்!
நேற்றைய படிப்பையும்
இன்றைய தேவையையும்
நாளைய இருப்பையும்
என்றும் கணக்கில் எடுத்தவன்
வெற்றியோடு மகிழ்வாய்
இருப்பதைக் காண்கின்றேன்!

வேறுபாடு

தோள் மூட்டுத் தெறிக்க
கட்டுக் கட்டாக
பொத்தகங்கள் சுமந்தது
அந்தக் காலம்...
கனதி குறைந்த கைப்பையிலே
குட்டி மடிக்கணினியை
தோளில் மாட்டிக்கிட்டு
பள்ளிக்கு நடைபோடுவது
இந்தக் காலம்...
அந்தக் கால, இந்தக் கால
வேறுபாடுகளுக்கிடையே
நம்மாளுகள்
பள்ளிக்குப் போகாமல் ஒளிப்பது
துன்பக் காலம்...
ஏடும் எழுதுகோலுமென்ன
குட்டி மடிக்கணினியென்ன
சுமப்பது சுமையல்லவென
மூளை முழுவதும்
அறிவைத் திரட்டியவர் வாழ்வே
பொற் காலம்!

Tuesday 6 August 2013

காதலும் திருமணமும்

ஒருவன் : திருமணம் ஆவதற்கு முன்னர் நீங்கள் காதலிக்கவில்லையா?

மற்றவன் : நான் மணமுடித்த கறுப்பி, பத்தாவது காதலியென்றால் பாருங்கோவேன்...

தொழிலா? வருவாயா?

ஒருத்தி : என்னடி உன்னுடைய ஆள் வெளிநாட்டில என்கிறாய், அங்கே என்ன கீழ்நிலை வேலை செய்யுறாங்கோ?

மற்றவள் : வேலை என்னவாச்சும் உனக்கென்ன, என்னுடைய ஆள் நிரம்பப் பணம் அனுப்புறாங்கோ... அது போதாதா?